
பிள்ளையார் கையிலிருக்கும் மோதகமும் இனிப்பு. அவரை சூழ்ந்திருக்கும் கருப்பஞ்சாறுக் கடலும் இனிப்பு. எப்படி இனிப்பை தேடி வண்டுக் கூட்டங்கள் மொய்க்குமோ, அதுபோல பக்தர்கள் எப்போதும் பிள்ளையாரை சிநேகத்துடனும், பக்தியுடனும் அண்டி நிற்பார்கள். மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம்; உடலை வருத்திச் செய்யும் எந்த தவமும் தேவையில்லை. இரண்டு கொத்து அறுகம்புல்லை எடுத்து பிள்ளையாரின் திருவடிகளில் போட்டாலே போதும். குளிர்ந்து அருளும் தயாபரன் அவர். பக்தர்கள் தங்கள் ஆசைக்கு ஆயிரம் திருப்பெயர்கள் இட்டு வணங்குவதும் இவருக்குத்தான். அப்படித்தான் இவருக்கு கரும்பாயிரம் என்றும் பெயர் வைத்தார்கள். அது அவரே நிகழ்த்திய சிறு லீலையால் வந்த திருப்பெயர்.
கருப்பஞ்சாறுக்கு நடுவில் நிற்கும் இந்த ஆதி வராஹப் பிள்ளையா, பாலகனாக வேடம் தரித்து வந்தார். தெருவில் ஓரமாக நின்றார். முகத்தில் கருணையும், குறும்பும் மிளிர்ந்தன. சற்று தொலைவில் கட்டுக் கட்டாக கரும்புகளை ஏற்றிய வண்டியை ஓட்டியபடி ஒருவன் வந்தான். தம்முடைய தந்தத்தை ஒடித்து மகாபாரதத்தை எழுதிய ஞான முதல்வனான விநாயகர், இங்கு கரும்புகளை ஒடித்து சாறு உறிஞ்ச, ஒரு பாலகனின் இயல்பாக ஆசை கொண்டார். பாலகன் வண்டியருகே நகர்ந்து ‘‘ஒரு கரும்பை கொடேன்’’ என்று வண்டிக்காரனிடம் கேட்டார். ‘‘ம்ஹூம்… முடியாது’’ என்று வண்டிக்காரன் மறுத்தான்.
பிரம்மச்சாரி பிள்ளையார் வண்டி ஓட்டத்தோடு தொடர்ந்து ஓடினார். கெஞ்சலும், கொஞ்சலுமாக மீண்டும் மீண்டும் கேட்டார். இதைக் கண்ட தெருவில் போன சிலர், ‘‘ஏனப்பா… அந்த குழந்தை கேட்குது இல்ல. ஒன்னேயொன்னு ஒடிச்சு கொடேன்.
பார்க்கறதுக்கே பிள்ளையாராட்டம் எப்படியிருக்கு!’’ என்று தங்களை அறியாமல் உண்மையை சொன்னார்கள். வண்டிக்காரன் பிடிவாதமாக இருந்தான். விஷமாக பேசத் தொடங்கினான். ‘‘இது கொஞ்சம் வேற மாதிரி கரும்பு. ஆமாம், இதை ஒடிச்சு உறிஞ்சினா கரிக்கும். ஆலையில கொண்டுபோய் வெல்லமா மாத்தினா இனிக்கும்’’ என்று வாய்க்கு வந்தபடி உளறினான். தொடர்ந்து கேட்டு அலுத்துப் போன சிறுவன் அருகிலுள்ள ஆலயத்திற்குள் சென்று மறைந்தார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வண்டியோட்டி அதிர்ந்து, ‘விநாயகப் பெருமானே!’ என்று அலறினான். தன்னையறியாது கோயிலுக்குள் சென்றான்.

தவறுணர்ந்தான். தண்டனிட்டான். தன்யனானான். கோபம் விலக்கிய விநாயகர் மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆயிரம் கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. மக்கள் கண்களில் நீர் வழிய நின்றனர். இப்படி பல விகட விளையாட்டுகளை விளையாடியே, மிகச் சாதாரணமாக ஞானானுபவத்தையும் அளித்து விடுவார் பிள்ளையார். இப்படி விளையாடியே தத்துவப் பொருளையும் விளக்கி, சாதாரண வாழ்வைக் கூட சிகரங்களில் அமர்த்திவிடும் சமர்த்தன். சற்றே பழமையான இந்த கரும்பாயிரம் பிள்ளையார் ஆலயத்தில் ஆகம விதிகளின் படி, வேதம் முழங்கிட நாள் தவறாது வழிபாடுகள் நடக்கின்றன.
தற்போது இந்தக் கோயில் புதுப்பொலிவோடு திகழ்கின்றுது.கும்பகோணத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும் இக்கோயிலின் பெருமையையும், அருள் வளமையையும் கேள்வியுற்று தரிசித்துச் செல்வது வழக்கம். எதைத் தொடங்கினாலும், விநாயகரை வணங்கித் தொடர்ந்தால் காரியம் நிறைவேறுவது சகஜமானது. அதுபோல இந்த ஆலயத்திற்கு செய்யும் சேவை சிறு புல் அளவாக இருந்தாலும் சரி, வண்டி வண்டியாக திருப்பிக் கொட்டிக் கொடுத்து விடும் வள்ளல் இவன். திருக்குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையார் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்திட ஆர்வத்துடன் காத்திருக்கிறார். பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிட திருவுளம் கொண்டுள்ளார். இந்த ஆலயம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது. – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
