
வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.
இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம்.
அத்தகைய மகத்துவமிக்க நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.
சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.
ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை கொடுத்து வீடு திரும்பவேண்டும்.
வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.
நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம்.
அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.
சிவராத்திரி விரத நாளில் செய்யக்கூடாதவை!
பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.
சிவராத்திரி உபவாசம் என்பது நியதி.
உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கி விட வேண்டும்.

அன்று ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும். சிவராத்திரி நாளில் முழு நேரமும் உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
முடியாதவர்கள் இருவேளை பால்,பழமும், ஒருவேளை உணவும் உண்ணலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள், எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
ஓம் நமசிவாய, ஓம் சிவாயநம மந்திரங்களை 1008 முறை ஜெபிக்க வேண்டும்.
இரவில் கோயிலில் நடக்கும், நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்து இருக்க வேண்டும்.
பசி தாங்குவதன் மூலம் ஆசை, கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஏழைகளின் பசியை உணரும் தன்மையும், தர்ம சிந்தனையும் ஏற்படும்.
விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும்.- Source: vikatan
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
