சர்வ ரோக நிவாரணி என்று அழைக்கப்படும் ‘கருஞ்சீரகத்தின்’ மருத்துவ குணங்கள்..!

0

நாம் தினமும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிற சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு) போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மருந்தாக பயன்படுகிற கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாகவே தினசரி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

மருந்து என்பது அதன் சேர்மானப் பொருட்களை சரியான அளவில் எடுத்து, குறிப்பிட்ட மருத்துவ முறையில் தயார் செய்து, குறிப்பிட்ட நோய்களுக்கு, சரியான அளவுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதால் அதுபோன்ற மருத்துவ குணமுடைய பொருட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதே நல்லது.

கருஞ்சீரகத்தின் பெருமைகள்

* கருஞ்சீரகப் பொடியினை காடியுடன் கலந்து உட்கொள்ள குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும். இதனையே 3 முதல் 7 நாட்கள் வரையில் காலை 1/2 கிராம், மாலையில் 4 கிராம் வீதம் Rabies என்கிற வெறிநாய்க்கடி மற்றும் இதர நச்சுக்கடிகளின் நஞ்சை நீக்குவதற்கும் கொடுக்கலாம்.

* கருஞ்சீரகத்தோடு ஆற்று தும்மட்டிச் சாறு விட்டரைத்து இருபக்க விலாப் பகுதிகளிலும் பூச குடலிலுள்ள புழுக்கள் நீங்கும்.

* நொச்சி குடிநீருடன் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொடுக்க மேகப்பிடிப்பு, சுரம், விட்டுவிட்டு வருகிற சுரம் தணியும்.

* கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதோடு காடி விட்டரைத்து படைகளுக்கும் பூசலாம். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும்.

* கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெயில் குழப்பி கரப்பான், சிரங்கு போன்றவற்றில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

* கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். சூதகக்கட்டு, சூதகச்சூலை போன்றவற்றுக்கு 1 கிராம் அல்லது 3 கிராம் அளவில் கொடுக்கலாம்.

* கருஞ்சீரகத்தின் தீநீர் அல்லது தைலத்தை முகர்ந்தாலும், பூசினாலும் பயத்தால் உண்டாகும் தலைநோய், மூக்குநீர் வடிதல், நரம்பைப் பற்றியுள்ள வலி, இடுப்புவலி போன்றவை தீரும்.

* கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்.

* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டரைத்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவிவர முகப்பரு மறையும்.

* இதை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply