ஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

நம் பாரம்பரியத்தில் திளைத்து, ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டு கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இறைவனது அருளாலேயே இல்வாழ்க்கைத்துணை அமைந்திருக்கிறது என்று நம்மிடம் இருபாலரும் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே வழியிருக்கிறது.

மூன்று கடல் .. மூன்று நதி இணையும் இடங்களை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறோம். சிறப்பிலும் சிறப்பாக, உயர்விலும் உயர்வாக கருதப்படும் அலகாபாத் பிரயாக்ராஜ் (Allahabad Prayagraj) என்னும் இடத்தில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் நீங்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, மனமொத்த தம்பதியர் ஏழேழு பிறவிக்கும் தம்பதியராக இருக்க வேண்டி செய்யும் பரிகாரமும். பெரும்பாலான தம்பதியருக்கு இத்தகைய பரிகார முறைகள் பற்றிய விவரங்கள் தெரியாது எனினும் அங்கிருக்கும் ஞானிகள், பரிகார பூஜை செய்பவர்கள் முன் வந்து தம்பதியரிடம் இதைச் சொல்லி செய்ய சொல்கிறார்கள்.

புனித நீராடிய தம்பதியர் வரிசையாக அமர வைக்கப்படுகிறார்கள். கணவனின் மடியில் மனைவி அமரவேண்டும். மனைவியின் கூந்தலை கணவன் சீவி கூந்தலின் நுனியை கத்தரிக்க வேண்டும். இந்த நுனி புண்ணிய நதியான கங்கையில் போடப்படுகிறது. பிறகு மனைவி கணவனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பாத பூஜை செய்ய வேண்டும். மனைவி கணவனின் காலை பிடித்தபடி எத்தனை பிறவிகள் நான் எடுத்தாலும் நீங்களே என் கணவானாக அமைய வேண்டும்.. என மனமார இறைவனிடம் நான் யாசித்து கேட்கும் இது நடக்க வேண்டும். இது சத்தியம்.. என்று சொல்ல வேண்டும்.

கணவன் மனைவியின் மீது தலைவைத்து எனக்கு மீண்டும் மனித பிறவி வாய்க்குமானால் என் வாழ்வில் இரண்டற கலந்து என் இன்பத்திலும் துன்பத்திலும் சமபங்கு கொண்டு மனமொத்து துணையாய் இருக்கும் நீயே என் மனைவியாக வரவேண்டும். நான் வணங்கும் இறைவன் எனக்கு துணைபுரிய வேண்டும் இது சத்தியம் என்று சொல்லவேண்டும். இப்படி வரிசையாக தம்பதியரை உட்காரவைத்து பூஜை செய்ய அங்கு ஆட்கள் உண்டு. அவர்கள் மந்திரம் சொல்ல சொல்ல தம்பதியர் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அவர்கள் விரும்பும் தட்சணையை காணிக்கையாக செலுத்துவார்கள்.

அடுத்த பிறவியிலும் மனிதனாக பிறப்போம்… நாமே இணைந்திருப்போம் என்னும் நம்பிக்கையுடன் திரும்பும் தம்பதியரின் மனதுக்குள் அக்கணமே ஒரு உறுதியான பந்தம் உருவாகும். அதுவரை அவர்களுக்குள் இருந்த சிறு பிணக்குகளும் அதற்கு பின் வரும் அவர்களது காலங்களில் சிறிதும் இருக்காது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. புண்ணியத் தலங்களுக்கு சென்று வந்த பிறகான அவர்களது மணவாழ்வு அன்பை அதிகரிக்கும். அவர்கள் இருவருக்கும் இடையே அன்பு மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆன்மிக விஷயங்களில் இருவரும் இணைந்து கவனம் செலுத்துவார்கள்.

தங்களால் இயன்றால் இப்போதே பிரயாக்ராஜ் புண்ணியதலத்துக்கு செல்லுங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் தீர்க்கவே முடியாத சிக்கல்கள் கூட தீர்ந்து, ஆதர்சன தம்பதியராய் வாழ்வீர்கள். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply