சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் போர் குற்றவாளியாகவும் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் 90 நாட்கள் வதிவிட அனுமதி பெற்று, நேற்றைய தினம் கோட்டாபய தாய்லாந்து சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே தாய்லாந்து சட்டமா அதிபரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
சிறிலங்காவில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியையடுத்து நாட்டை விட்டுத் தப்பிச்சென்ற கோட்டாபய, மாலைதீவில் தஞ்சமடைந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார். அவ்வாறான நிலையில், சிங்கப்பூர் அரசாங்கத்திடம், கோட்டாபயவை கைது செய்யமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில், தாய்லாந்து அரசாங்கத்திடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களை புரிந்தமைக்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கபையின் அறிக்கை கூறுகின்ற விடையத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி 1948 ஆம் ஆண்டு இன அழிப்பு சட்டத்தின் கீழும், 1949ஆம் ஆண்டு ஜெனீவா சட்டங்களின் கீழும் 1977 ஆம் ஆண்டு அடிசனல் ப்ரொட்டோகோல் (additional protocol) எனப்படும் கூடுதல் நெறிமுறையின் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழும் கோட்டாபயவை கைது செய்யுமாறு தாய்லாந்து சட்டமா அதிபரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.