ஆகஸ்ட் 9 ரணிலை வீட்டுக்கு அனுப்ப போவதாக கூறினர் இறுதியில் நடந்தது என்ன?போராட்டகாரர்கள் வீட்டுக்கு சென்றனர்.

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இன்னும் மக்கள் ஆதரவு இருப்பதாகவும் தமது கட்சி தேர்தல்களை எதிர்கொள்ள எந்த வகையிலும் பயப்படாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தலுக்கு நாங்கள் அஞ்சுகிறோம் என எவரும் நினைக்கலாம். எந்த வகையிலும் எமக்கு அப்படியான பயமில்லை. தற்போதைய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.

2020 ஆம் ஆகஸ்ட் 5 ஆம் திகதியே தேர்தல் நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளே கடந்துள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஊடாக போட்டியிட்ட அனைவருக்கும் 68 லட்சத்து 52 ஆயிரத்து 690 வாக்குகள் கிடைத்தன.

மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ஜூன் 9 ஆம் திகதி பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார். கோட்டாபய ராஜபக்ச ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்த விலகினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 9 ஆம் திகதி வீட்டுக்கு அனுப்ப போவதாக கூறினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அன்றைய தினம் வீட்டுக்கு சென்றனர்.

இதனால், தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவோம் என ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Leave a Reply