அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் பாரிய சிக்கல் நிலை-யாழ் வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தகவல்.

0

தென்னிலங்கையில் நிலவும் அசாதாரண சூழ் நிலை காரணத்தால் அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்கள் பொருள்களை வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தற்போதைய நிலையில் பொருள்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதனை வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தவிர்க்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

“சில இடங்களில் வர்த்தகர்கள் பொருள்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கண்காணிப்புகளை மேற்கொள்ளும்.தென்னிலங்கையில் இருந்து அத்தியாவசியப் பொருள்களை எடுத்து வருவது ஒரு வாரம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பிலும் தற்போதைய நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலும் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது” என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply