தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளில் மாத்திரமே மூடப்படுகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக 3 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படுவதால் மது பிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கடைகள் மூடப்படுவதால் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
கடைகள் மூடப்படுவதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் போதுமான அளவு சரக்குகளை அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்தனர்.
மேலும் 3 நாட்கள் கடைகள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.