தமிழகத்தில் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்றது.
இதன் பிரகாரம் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும்.
அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது.
குறித்த வைரஸ் தொற்று பரவல் குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அத்துடன் கொவிட் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இறுதி பருவத்தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
மேலும் கோவில்கள் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட் தொற்றின் நிலைமை குறித்து தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அனுமதிக்கலாமா என்பது பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.



