கேரளாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தனியார் பேருந்து சங்க தலைவர் லாரன்ஸ் கருத்து வெளியிடுகையில்.
கேரளாவில் தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை சரி செய்யும் நோக்கில் மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்துதல், டீசல் மானியம் வழங்குதல், சாலை வரியில் தளர்வு வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அரசிடம் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கடந்த நவம்பர் 9ஆம் திகதி உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் பிரகாரம் இன்று முதல் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படும் என லாரன்ஸ் பாபு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



