சுடுகாட்டிற்கு அருகாமையில் வீடு இருந்தால் இதை எல்லாம் செய்வதன் மூலம் எந்த விதமான பிரேத தோஷமும் உங்களை அண்டவே அண்டாது.

0

நமது நாட்டில் கிராமங்கள் கூட வேகமாக நகரமயமாகும் இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் சொந்தமாக நிலம் வாங்கவோ அல்லது தங்களுக்கென்று ஒரு சொந்த வீடோ கட்ட முடியாமல் போகின்றது.

சிலர் தங்களுக்கு விருப்பமான இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கூட தங்க முடிவதில்லை.

இந்த சூழ்நிலையில் சிலர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஊர் எல்லையோரம் இருக்கின்ற சுடுகாட்டிற்கு அருகில் சொந்த வீட்டிலோ அல்லது வாடகை வீட்டிலோ வசிக்கும் ஒரு நிலை ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதையும் அதற்கான எளிய பரிகாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் முடிந்த வரை சுடுகாட்டிற்கு அருகாமையில் இருக்கும் நிலத்தை வாங்குவதையும், அந்த நிலத்தில் சொந்த வீடு கட்டுவதையும் அல்லது சுடுகாட்டிற்கு அருகாமையில் வாடகை வீட்டில் வசிப்பதையும் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும்.

“நாங்கள் வீடு கட்டும்போது அருகில் சுடுகாடு இல்லை, இப்போது தான் வந்தது”, “எங்களால் சொந்த வீட்டை விட்டு போக முடியாத சூழ்நிலை! என்ன செய்வது”? என கேட்பவர்கள் சுடுகாட்டிற்கு அருகில் இருக்கும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு சுடுகாடுகளில் எரிகின்ற பிணங்களை ஒரு போதும் பார்க்கக்கூடாது.

அப்படி பார்ப்பதால் “அக்னி பகவானின்” சாபத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி “அக்னி தோஷம்” உண்டாகும்.

இதனால் நம் வீட்டில் வசிக்கின்ற குலதெய்வம் மற்றும் பிற உப தெய்வ சக்திகள் வெளியேறிவிடும்.

அந்த வீட்டில் வசிப்பவர்களின் முகத்தில் தேஜஸ், முகவசியம் போன்றவை அறவே நீங்கி, அவர்களின் முகங்களை மற்றவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு உண்டாகும்.

வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பொருளாதார சிக்கல்கள் உண்டாகும்.

துஷ்ட சக்திகள் அந்த வீட்டில் வசிப்பவர்களை பீடிக்கவும் வழிவகை செய்யும்.

மேற்கூறிய முறையில் சுடுகாட்டிற்கு அருகில் வசிக்கும் நிலையில் இருக்கும் நபர்கள் இத்தகைய தோஷத்திற்கு பரிகாரமாக ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரும் வரையில் தங்கள் வீடுகளில் இருக்கின்ற துளசிச் செடிக்கு 3 கையளவு ‘ஜல தர்ப்பணம்” எனப்படும் தண்ணீர் விடும் சடங்கை செய்ய வேண்டும்.

மேலும் சூரிய பகவானையும், அக்னி பகவானை நினைத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரேத தோஷம் நீங்க வேண்டும் என மனதார வேண்டி, பிறகு உங்கள் வலது உள்ளங்கையில் சிறிதளவு நீரை வைத்துக் கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்ப தோஷம் நிவாரய நிவாரய” என்கிற மந்திரத்தை மூன்று முறை துதித்து வலது கையில் இருக்கும் தண்ணீரை உங்கள் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு 7, 14, 21 என்கிற எண்ணிக்கையில் கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தட்டில் குங்குமத்தை போட்டு, அதில் சிறிதளவு நீர் விட்டு நன்கு கலக்கி, ஒரு மாதுளை செடியின் குச்சியை கொண்டு அந்த குங்குமத்தை தொட்டு கோதுமை உருண்டைகளின் மீது “ஸ்ரீம்” என எழுதி அந்த கோதுமை உருண்டைகளை கோயில் குளம், ஆறு போன்றவற்றில் இருக்கின்ற மீன்களுக்கு உணவாக வீசிவிட வேண்டும்.

இந்தப் பரிகாரத்தை வெள்ளி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டும்.

இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரேத தோஷம் நீங்கி லட்சுமி தேவியின் அருள் கிடைத்து சீரான வருமானம் வர வழிவகுக்கும்.

சுடுகாட்டிற்கு அருகில் இருக்கும் வீடுகளில் நிரந்தரமாக வசிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு முறை செய்வது சிறப்பு.

Leave a Reply