கடன் பட்டு நாட்டை நிர்வாகிக்கும் ஒரு அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்க்க வில்லை.

0

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற போது மேலும் கடன் சுமைகளை ஏற்றி நாட்டை நிர்வகிக்கும் ஒரு அரசாங்கத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்க வில்லை என கிண்ணியா நகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம். எம். மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று(19) வெள்ளிக்கிழமை வெளியிட்ட  ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
உள்ளூர் உற்பத்தியை, அதிகரித்து தன்னிறைவு கண்டு, இறக்குமதி களை நிறுத்தி, தன்னிறைவின் பின் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வது,போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி  நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சிக்க வேண்டுமே தவிர மேலும் மேலும் கடன் சுமைகளை அதிகரித்து நாட்டை நிர்வகிப்பது என்பது பேராபத்தை உண்டு பண்ணும் செயற்பாடாகும்.


ஆனால் அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்தியதோடு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான  பொருட்களுக்கும் செயற்கையான தட்டுப்பாடுகளை உண்டாக்கி விலைகளையும் மும்மடங்குக்கு மேல் அதிகரித்து இருக்கின்றார்கள்.

கட்டுப்பாட்டு விலையை கூட நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாரில்லை. 

மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதும், ஊழல்வாதிகள் என்றும், ஏற்றுமதி இறக்குமதி ,ஒப்பந்த வேலைகள், கொள்வனவுகளில் தரகுப் பணங்களை பெறுகின்றார்கள் என்றும் குற்றம் சுமத்தினாலும் எவருக்குமே சட்ட நடவடிக்கையை எடுக்காது நாட்டையே குட்டிச் சுவர் ஆக்குகிறார்கள்.


அதேபோன்று மக்களுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், சமையல் எரிவாயு, மரக்கரி, அரிசி,பால்மா போன்றவை கூட பல மடங்கு விலை அதிகரிக்கப் பட்டதோடு சந்தைகளில் தட்டுப்பாடாகவும் காணப்படுகின்றன.


நெற்செய்கையோடு ஏனைய பயிர்ச்செய்கையும் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கின்றன.

இரசாயன உரத்திற்கு போராடுகின்ற விவசாயிகள் நட்டமடைந்து அறுவடையின் பின் மீண்டும் பாரிய போராட்டங்களுக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 


அரசாங்கத்தின் பிழையான திட்டமிடலே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமைக்கு காரணமாக அமைகின்றன எனவும் இன்னும் ஓரிரு மாதங்களில் உணவுத் தட்டுப்பாடுகளுக்கு நாடு முகம் கொடுக்கவேண்டி வரும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply