ஆண்டுதோறும் கேரளாவில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பொழியும்.
இதற்கமைய இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 3ஆம் திகதி இந்த தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.
ஒரு வார காலமாக பெய்த மழை பின்னர் சற்று ஓய்ந்த நிலையில் காணப்பட்டது.
அதன் பின்னர் மலை பகுதிகளில் மாத்திரம் பெய்து வந்த மழை கடந்த வாரம் முதல் மீண்டும் தீவிரமடைந்தது.
இதனையடுத்து எர்ணாக்குளம், இடுக்கி,திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் , காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களிலேயே அதிதீவிர மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இன்றும் நாளையும் குறித்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடலிலும் சூறைக் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு மேற்குறிப்பிடப்பட்ட எட்டு மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான அனர்த்தம் நிலவும் மாவட்டங்களில் வருவாய் துறையினர் மற்றும் பேரிடர் ,மீட்பு துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



