புதிய வீடு, நிலம் வாங்க உதவும் வராக மூர்த்தி

0

பரந்த விரிந்த இந்த பூமியில் சொந்தமாக வீட்டை கட்டி வாழக்கூட நிலம் இல்லாமல் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிலம் மற்றும் வீடு பெரும் யோகத்தை தரும் “ஸ்ரீ வராக மூர்த்தியை” பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

புராண காலத்தில் இரண்யாட்சகன் எனும் அரக்கன் பூதேவி எனும் பூமி தாயை கொண்டு போய் கடலுக்குள் மறைத்து வைத்து, அவனும் அங்கேயே இருந்து விட்டான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள், காக்கும் கடவுளான அந்த மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அப்போது இரண்யாட்சகனை வதம் புரிய காட்டு பன்றியான “வராக” அவதாரத்தை எடுத்தார் திருமால்.

ஏனெனில் இரண்யாட்சகன் தவமியற்றி சிவ பெருமானிடம் தனக்கு பன்றியை தவிர வேறு எந்த ஒரு விலங்கினாலும் மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பெற்றான். பன்றியை குறைத்து மதிப்பிட்டு இரண்யாட்சகன் இத்தகைய வரத்தை பெற்றதால், அந்த காட்டு பன்றியின் உருவம் கொண்டு கடலுக்குள் சென்று, காட்டு பன்றியின் வாயில் இருக்கும் தந்தம் போன்ற பற்களால், இரண்யாட்சகனை குத்தி கொன்று பூமி தாயை கடலுக்குள் இருந்து மீட்டெடுத்தார் வராக அவதாரம் தரித்த மகாவிஷ்ணு.

பல காலமாகவே விஷ்ணுவின் வராகமூர்த்தி வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் இந்திய நாட்டை ஆட்சிபுரிந்த இஸ்லாமியர்களின் பண்பாட்டு தாக்கத்தால் இந்த வராகமூர்த்தி வழிபாடு சில காலம் வழக்கிழந்தது. தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த வழிபாட்டு முறை. நமது பாரத நாட்டில் குறைந்த அளவிலேயே தான் வராக மூர்த்திக்கு கோவில்கள் உள்ளன. அதில் மிகவும் புகழ் பெற்ற வராக மூர்த்தி கோவில் “திருப்பதி- திருமலையில்” இருக்கும் “ஸ்ரீ ஆதி வராக சுவாமி” திருக்கோயிலாகும்.

அந்த நாராயணனுக்கே தங்கிக்கொள்ள பூமி தானம் அளித்த அந்த திருமலை வராக மூர்த்தியை செவ்வாய் கிழமையன்று வழிபாடு செய்வதால், ஆதி வராக சுவாமியின் அருளையும் நவகிரகங்களில் “பூமி காரகனாகிய” “செவ்வாய் பகவானின்” அருளையும் பெற்று தந்து, நமக்கு வந்து சேர வேண்டிய பூர்வீக நிலங்கள் நமக்கு கிடைக்கும். மேலும் புதிய நிலங்கள் மற்றும் புதிய வீடுகளை கட்டுவதற்கான நேரம் கூடி வரும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply