
ஷீர்டியில் சாயி பாபா முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம், புனிதமான ஒரு வேப்பமரத்தடி ஆகும். அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடிக்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில்தான், தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியுள்ளார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரிய வேண்டும் என்பது அவரது ஆக்ஞை. இந்து – இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும் அவர் நடத்தி வந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ ‘அல்லா மாலிக்’ என்ற அல்லாஹின் திரு நாமத்தை. இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் ’பாபா’. பாபா என்ற சொல்லுக்கு தந்தை என்பது பொருள்.
தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது பாபாவின்வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.
பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. காணாமல் போன குதிரையைக் கண்டுபிடித்தது எல்லாம் சர்வ சாதாரணம். இறந்தவரை உயிர் பிழைக்க வைத்தது. அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கியது, நோய் தீர்த்தது, திருடர்களிடமிருந்து காத்தது, ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தது என்று அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இன்றும் அவர் ஆற்றிவரும் அற்புதங்களுக்குக் குறைவே இல்லை.
பாபாவின் சத்திய வாக்கு
எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.
என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.
எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.

எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.
கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.
இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்.
மகா சமாதி
தம்மை நாடி வந்தோரின் வாழ்வில் ஏற்றமும் உயர்வும் அளித்த பாபா, தீராத வரப்ரசாதியாய் இருந்து பலரது நோய்களை நீக்கியிருக்கிறார். பலரது பாவங்களைப் போக்கி, துன்பங்களைக் களைந்திருக்கிறார். 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு ஸ்ரீ ஷிர்டி பாபா மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். இதே விஜயதசமி நன்னாளில்தான் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகளும் மகா சமாதி ஆனார். அந்த அளவுக்கு சிறப்புப் பொருந்திய நன்னாள் விஜயதசமி.

விஜயதசமியின் சிறப்பு
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. அன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு. அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!
பகவான் ஸ்ரீ பாபா மகா சமாதி அடைந்த இந்த நன்னாளில் வருடந்தோறும் ஷிர்டியில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

சாயி அருள்
பக்தர்களுக்கு அருள்வதற்காகவே அவதாரம் செய்தவர் சாயி பகவான். இவரது அருளை நாம் பூரணமாகப் பெற பகவானின் வரலாறைக் கூறும் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தொடர்ந்து வாசிக்க வேண்டும். அவ்வாறு பக்தியோடு வாசிக்க நம் பிரச்சனைகள் அகலும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. அதே போல சாயி பகவானின் மீது வியாழக்கிழமை விரதம் இருப்பதும் பூரண பலன் தரும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விரதமிருக்க நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். விரதத்தை வியாழக் கிழமையில் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்க வேண்டும். எந்தக் காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை பாபா படத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். பால், சர்க்கரைப் பொங்கல், பழம் நிவேதனம் செய்ய வேண்டும். பகலில் ஒரு வேளையாவது உபவாசம் இருந்து செய்ய வேண்டும்.
பகவான் சாயிநாதனின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.
ஓம் சாயி நமோ நம: ஸ்ரீ சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம: சத்குரு சாயி நமோ நம
ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மராமாய தீமஹி
தந்நோ பாபா ப்ரசோதயாத்!!- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
