
திருமணம் என்பது ஆண், பெண் இணைந்து வாழ்க்கை நடத்துவது மட்டுமல்ல, வருங்கால சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பை தரும் குழந்தைகளை பெற்று, வளர்க்கும் சமுதாய பொறுப்பும் ஏற்படுகிறது. நமது சந்ததிகள் சிறந்த உடல் மற்றும் மனநலத்தோடு இருப்பது அவசியம். ஆனால் சிலரின் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, எப்படிப்பட்ட சிகிச்சைகள் செய்தும் விரைவில் குணமடையாத நிலை இருக்கிறது. மருத்துவத்தோடு இறைவனின் அருளாசி இருந்தால் விரைவில் அனைத்து நோய்கள், பாதிப்புகளிலிருந்து விரைவில் குணாமாகலாம். அதற்கான ஒரு விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க குழந்தைகளின் பெற்றோர்கள் மற்ற வகையான விரதங்கள் மேற்கொள்வதை காட்டிலும் விநாயகர் வழிபாடு அல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது என்பது ஆன்மீக ஆன்றோர்களின் வாக்காகும். இந்த விநாயகர் வழிபாடு மற்றும் விரத முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விநாயக பெருமானை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி நாளன்றோ அல்லது பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் இணைந்தோ அல்லது எவரேனும் ஒருவரோ இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
விரதம் மேற்கொள்பவர்கள் காலையில் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படம் வைக்க வேண்டும். பின்பு அப்படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, விநாயகருக்குரிய மந்திரங்கள், துதிகள் படிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது நிச்சய பலன் தரும்.

பௌர்ணமி தினத்தில் விரதம் இருக்கும் பட்சத்தில் மாலையில் விநாயகர் கோயில் அல்லது சந்நிதிக்கு சென்று விநாயக பெருமானை வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு வந்து சந்திர தரிசனம் முடித்த பிறகு விநாயகருக்கு தீபாராதனை காட்டி வழிபட்ட பிறகு, நைவேத்திய பிரசாதங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிய பிறகு விரதம் இருப்பவர்கள் பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
மேற்சொன்ன முறைப்படி விநாயகருக்கு விரதம் இருந்து அவரை வழிபடுபவர்களுக்கு கர்ம வினைகள் நீங்கும். உடல், மனநலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்களேயானால் கூடிய விரைவில் அவர்களின் குழந்தைகள் விரைவிலேயே நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
