
சத்தியமங்கலம் நகரத்தையொட்டி ஒரு அற்புத வெண்குன்று உள்ளது. இதனை மக்கள் தவளகிரி என்றே பழங்காலம் முதல் அழைத்து வருகின்றனர். இந்தக் குன்றில் முருகன், தண்டாயுதபாணி சுவாமி என்ற திருநாமம் கொண்டருளுகிறார். இந்தப் பகுதியைச் சுற்றி விவசாயம் வளர்ச்சியடையவும், மக்களின் வாழ்க்கை மேன்மையடையவும் அருள்பாலித்து வருகிறார். துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து விட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியினை அவர் கடக்கும்போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெருகிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது.
முருகப் பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பைச் செய்கிறார் என்று உணர்ந்தார். உடனே மெய்சிலிர்த்து நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்குக் கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து, அந்த நன்றிக்கடனாக மலையின் உச்சியில் முருகப் பெருமானுக்கு அழகிய சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். பிற்காலத்தில் திப்புசுல்தான் தனது படைத்தளபதிகளில் ஒருவரின் வேண்டுகோளினை ஏற்று இந்த தண்டாயுதபாணி சுவாமிக்கு கர்ப்பகிரகம் கட்டித் தந்ததாக செவிவழிச் செய்தி உண்டு.

வெண்ணிறப் பாறைகளைக் கொண்ட தவளகிரி மலை ஏறிச் செல்ல 270 படிகள் கொண்ட பாதையும், வாகனங்கள் செல்ல தார்ச்சாலையும் உள்ளன. இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு, அங்கேயே மேற்கு நோக்கி நாகருடன் வீற்றிருக்கும் விநாயகரை முதலில் தரிசிக்கின்றனர். படிக்கட்டுகள் வழியே சென்றால் கூடுதல் பலன் உண்டு என்பதை தாங்கள் அனுபவரீதியாக உணர்ந்ததாகவும், படிக்கட்டுகள் வழியாக சென்றால் தான் மலைக்கு நடுவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் இடும்பக் குமரன் அருள் பெற முடியும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இடும்பக் குமரனை தரிசித்த பின்னர் மேற்கு நோக்கிப் பார்த்தால் பவானி நதி பாய்ந்து வரும் அழகை ரசிக்கலாம்.
அதைத் தொடர்ந்து படிகளேறிச் சென்றால் தனித்தனி சந்நதிகளில் பால விநாயகரும், வள்ளிதெய்வானையும் கிழக்கு நோக்கி அருளுகின்றனர். வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பு. திருமணத் தடையுள்ள கன்னிப் பெண்கள் வள்ளிக்கும், தெய்வானைக்கும் பட்டுப் பாவாடை சாத்தி மனமுருக வேண்டிக் கொண்டால் அந்தத் தடை நீங்குவதாக ஐதீகம். இந்த இரு சந்நதிகளும் தண்டாயுதபாணி சுவாமி சந்நதிக்குக் கீழ்பகுதியில் அமைந்துள்ளன. மேல்பகுதியில் மூலவர் வீற்றிருக்கும் சந்நதியின் கருவறையில் தண்டாயுதபாணி சுவாமி சத்தியமங்கல நகரத்தை நோக்கி மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார்.
இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இடது கையில் வேல் ஏந்தியுள்ளார். அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான பழனியில் முருகர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும், அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி சண்முகநதி பாய்வதும் போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கியுள்ளார், பவானி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை இத்தலத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறையை தொடர்ந்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் தன் அலகில் நாகத்தைப் பற்றிய மயில் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன.
சித்திரை மாதம் முதல் மூன்று தினங்களில் சூரியன் மறையும் முன்னர் முதல்நாள் மூலவர் பாலதண்டாயுதபாணியின் பாதத்திலும், இரண்டாவது நாள் அவரது மார்பிலும், மூன்றாவது நாள் முகத்தின் மீதும் ஒளிபடுவதால் இவர் சூரியனால் வழிபடப்படும் முருகன் என்ற சிறப்பையும் பெறுகிறார். இதுபோல ஒளி விழும் தருணத்தில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டால் முருகப்பெருமானின் ஆசியோடு, சூரியபகவானின் அருளும் நமக்குக் கிட்டும் என்பது ஐதீகம். கிருத்திகை, சஷ்டி காலங்களில் காலை 10 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

பௌர்ணமி தோறும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அமாவாசை நாளில் பகல் 11 மணிக்கு சிறப்பு வழிபாடு விமரிசையாக நடக்கின்றன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்று மங்கள வார பூஜை காலை 7.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும், வெள்ளிக்கிழமை நாட்களில் மாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இதுமாதிரியான விசேஷ தினங்களில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக பூஜையினை கண்குளிர கண்டால் மனம் அமைதியாகி தியான நிலையினை அடைந்து புத்துணர்ச்சி பெறுவதாக பக்தர்கள் பக்தி உணர்வோடு கூறுகின்றனர்.
சித்திரை மாதம் முதல் நாள், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை மற்றும் கார்த்திகை மாத கிருத்திகை ஆகிய விசேஷங்கள் விழாபோல் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தை பூசத் திருநாள் இங்கே ஒரு பெருவிழாவாகும். அன்றைய தினம் ஆறு கால பூஜைகள், விசேஷ அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளுடன் அமர்க்களமாக நடைபெறுகிறது. மலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாலதண்டாயுதபாணிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தக் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த அழகுமிக்க காவடி ஆட்டத்தைக் காண சத்தியமங்கல மக்கள் அனைவரும் மலைக் கோயில் முழுவதும் கூடியிருப்பார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கொடிவேரி செல்லும் பேருந்தில் பயணித்து மலைக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் அடிவாரத்தை அடையலாம். சத்தியமங்கலத்திலிருந்து இருபது நிமிடத்திற்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. – Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
