திருமணமான பெண்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை பெண்கள் வணங்கலாமா?

0

பிறந்த குழந்தைகள் அனைவருமே தாய், தந்தையின் இரத்தத்தோடு தொடர்பு உடையவர்கள். தந்தையின் முன்னோர்களால், தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்ட தெய்வமே, முதல் தெய்வமும், இவர்களுக்கு குலதெய்வமும் ஆகும்.

ஆண் பிள்ளைகளுக்கு குலதெய்வம் மாறாது. ஆனால் பெண்கள், பிறந்த வீட்டில் இருக்கும் வரை, பிறந்த வீட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டுக்கு சென்றதும் அவர்கள் வழக்கப்படி வணங்கும் குலதெய்வத்தையும் வழிபடுகிறார்கள்.

திருமணமான பெண்கள், புகுந்த வீட்டுக்கு சென்றதும், தங்கள் குலதெய்வத்தை மறந்து, கணவன் வீட்டு குலதெய்வத்தை ஏற்றுகொள்கிறாள். பண்டிகை, பூஜைகள், விசேஷங்கள், விரதங்களில், முதல் வழிபாடு என்பது அந்த வீட்டின் குல தெய்வத்துக்கே என்பதால், பெண்களும் கணவரது வழக்கப்படி, அவர்களது குல தெய்வத்தை வணங்குகிறார்கள்.

ஆனால் பிறந்த வீட்டு குலதெய்வம், அப்பெண்ணுக்கு அப்போதும் துணையாகவே இருக்கிறது என்பதே உண்மை.
குலதெய்வங்கள், தமது பெண் பிள்ளைகளை, வேறொருவர் வீட்டுக்கு அனுப்பும் போது அவர்களுக்குரிய குலதெய்வத்திடம் தாமே ஒப்படைக்கிறது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

மாங்கல்யம் ஏந்திக்கொள்ளும் போது, அப்பெண் தன்னை மொத்தமும் கணவனது குடும்பத்துக்கு அர்ப்பணித்துவிடுகிறாள். அப்போது, அங்கிருக்கும் அக்னி தீபத்தில், இரண்டு வீட்டு குலதெய்வங்களும் கண்ணுக்கு தெரியாமல் மணமக்களை ஆசிர்வாதம் செய்கிறார்கள்.

அக்கணமே, மணப்பெண்ணின் குலதெய்வம், அவளை பாதுகாக்கும் பொறுப்பை நீ ஏந்திக்கொள்வாய் என்று தமது சகோதர குலதெய்வத்திடம் ஒப்படைக்கிறது. அதே நேரம், அவளை பாதுகாப்பதையும் முழுமையாக கைவிடவில்லை என்று சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் தெரிவிக்கிறது.

திருமணத்துக்கு பிறகு, புகுந்த வீட்டு குலதெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே, உங்கள் குலதெய்வமும் திருப்தி அடைகிறது. பிறந்த வீட்டு குலதெய்வத்துக்கென்று தனி வழிபாடு தேவையில்லை. எல்லா ஆலயங்களுக்கும் செல்வது போல், உங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தையும் வழிபடலாம். அதை வணக்ககூடாதென்று எந்த தடையும் கிடையாது.

ஆண்களை அவர்களது குலதெய்வம் காக்கிறது என்றால், பெண்கள் பிறந்தவீடு, புகுந்த வீடு என்று இரண்டு குலதெய்வங்கள் காக்கும் அருளை பெறுகிறார்கள்- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply