
குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லைகள் யாவும் நீங்கும்
குரு பகவானின் ஆதிக்கம் உடையது இந்த மூலிகை. மூலிகை சக்தி ரகசியங்களில் காணும்போது, ‘அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்…’, ‘கல்லாலம் இருக்கும் இடத்தில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையேது…’ எனத் திகழும் வாசகங்களால் இதன் மகத்துவத்தை அறியலாம். இந்த ‘கல்லாலம்’ குறித்து தெய்வக் கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு.
உலக நன்மையின் பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகமாக தியானத்தில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி பகவான், ஒரு தருணத்தில் அந்த இடமும் சூழலும் அங்கிருந்த மக்களால் அசுத்தம் அடைந்ததாகக் கருதி, வேறு இடத்துக்கு நகர திருவுளம்கொண்டார்.
அதன்படி, மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று ஒரு பாறையில் அமர்ந்தார். இந்த நிலையில், ஆலமரத்தடியில் அவர் அமர்ந்திருந்தபோது, அனுதினமும் அவரை வழிபட்டுவந்த அன்னப் பறவை ஒன்று மரத்திலிருந்து தனது அலகால் கொத்தி எடுத்துவந்த ஆலம் விதையை, பகவான் அமர்ந்திருந்த பாறையில் போட்டுவிட்டுச் சென்றது. இயற்கை தந்த நீரால் அந்த விதை துளிர்விட்டு, கல்லின் மீது வளர்ந்த கல்லால மரமாகக் கிளைபரப்பி, பகவானுக்கு நிழல் கொடுத்தது. லட்சுமிதேவியின் அம்சம் அன்னப்பறவை. அதன் மூலம் வந்து வளர்ந்ததால், இந்த விருட்சமும் செல்வ கடாட்சம் அருளும் தெய்வத்தன்மையைப் பெற்றது… என நீள்கிறது அந்தக் கதை.

உருவாகும் தன்மைக்கு ஏற்ப இந்தக் கல்லால மூலிகை, ஆண் வகை, பெண் வகை, மலட்டு வகை என மூன்று வகைப்படும்.சொரசொரப்பானவை ஆண் வகை; இலையுடன் காய் இருப்பது மலட்டு வகை; மிருதுவாக வழவழப்புடன் காணப்படுவது பெண் வகை.
இவற்றில், பெண் வகை மரத்தின் இலைகள், லட்சுமி கடாட்சம் மிகுந்ததாகும் என்பர். சப்போட்டா மர இலைகளை லட்சுமி மூலிகை என்று கொண்டு வந்து வைக்கிறார்கள் சிலர். அதன் இலையும் பெண் வகை கல்லாலம் போன்றே இருக்கும்; கவனம் தேவை.
பூக்களோடு காணப்படும் இந்த வகை மரங்கள், செங்கல்பட்டு, நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வளர்ந்து வந்தன. இன்றைக்கும், சிற்சில காட்டுப் பகுதிகளில் தூய்மையான கல்லால மரங்களைக் காணலாம்.
இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவெனில், குருவருள் கூடி வந்தாலும், சுக்ர தசை வந்தாலும், இந்த மூலிகையை அதாவது கல்லால இலையை வழிபடும் பேறு கிடைத்துவிடும்.

ஒன்றாம் இடத்து குரு – வாழ்வின் உச்சநிலை.
குடும்ப ஸ்தானத்தில் குரு – கோடி தனம்.
3-ம் பாவக குரு- இளையோருக்கு யோகம்.
சுக ஸ்தானத்தில் குரு உச்சம்- ஸ்வர்க்க யோகம்;
பூர்வத்தில் குரு- எண்ணிலா யோகம்.
லாப ஸ்தானத்தில் குரு – உலோபியும் உயர்வான்.
இப்படியான விதிகளைச் சொல்கின்றன ஜோதிட கிரந்தங்கள். இப்படியான குருவின் திருவருளையும் லட்சுமிகடாட்சத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெற்று மகிழ, கல்லால இலை வழிபாடு உதவும்.
குரு ஸ்தலங்களில் வழிபாடு, குலத்தின் பரம்பரை குரு பூஜை, சித்தர்களை குருவாக எண்ணி யோக வழிபாடு செய்வது, குரு தொடர்பான விருட்ச வழிபாடு ஆகியவற்றால் குருவருள் கைகூடும். இவற்றில், கல்லால இலை வழிபாடு 4-வது வகை.

ஒரு சுபமுகூர்த்த நன்னாளிலோ (இந்தச் சுபமுகூர்த்த தினம் வியாழக்கிழமையுடன் சேர்ந்து வந்தால் கூடுதல் சிறப்பு), பஞ்சாங்க சுத்தி உடைய நாளிலோ, மூலிகைகள் குறித்த விஷய ஞானம் உள்ளவர்கள் மூலம், பெண்வகையைச் சேர்ந்த கல்லால இலையை எடுத்து வர வேண்டும். பிறகு, பால் மற்றும் சந்தனத்தால் கழுவி சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைக்கவேண்டும்.
தொடர்ந்து, மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்களைச் சமர்ப்பித்து, அன்றைய திதி- வாரம்- நட்சத்திரம் சொல்லி, ‘மம சீக்கிர தனதான்ய விருத்தியர்த்தம் குடும்ப க்ஷேமார்த்தம்’ என்று வேண்டிக்கொள்ளவேண்டும்.
பின்னர் முறைப்படி, முழுமுதற் தெய்வமான விநாயகரை வணங்கி வழிபடவேண்டும்.
‘துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று மும்முறை சொல்லி, கணபதிக்கு ஆரத்தி காட்டி துதித்தபின்னர், மணைப்பலகை ஒன்றில் குருபகவானின் யந்திர எண் கட்டத்தை வரைந்துவைக்க வேண்டும்.
அடுத்ததாக…
‘அநர்க்க ரத்ந சம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரியா:
தப்தசாமி கராகாரோ ஜிததாவா நலாக்ருதி:’
என மூன்று முறை சொல்லி வணங்கிவிட்டு, பின்வரும்
பாடலைப் பாடித் துதிக்கவேண்டும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்

இந்தத் துதியையும் மூன்று முறை சொல்லி வணங்கிவிட்டு, கீழ்க்காணும் ஸ்ரீஐஸ்வர்ய லட்சுமி துதியைச் சொல்லி வணங்க வேண்டும்.
‘ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை சிம்மவாஹின்யை பலாயை,
விருட்ச ரூபிண்யை மம ஐஸ்வர்யம் தன குருதே நம:
எனும் இந்தத் துதியை 108 முறை சொல்லி வழிபடுவது விசேஷம்!
குபேர காலம் என்று சொல்லக்கூடிய வியாழன் மாலை 5 முதல் 8 மணிக்குள் வழிபடுவது சிறப்பு.பூஜை முடிந்ததும், சிறிய புத்தகம் ஒன்றில் இலையை வைத்துப் பாதுகாக்கலாம். மேற்காணும் முறைப்படி வாரம் ஒருமுறை கல்லால இலையை வழிபட்டுவர, அபரிமிதமான பலனை அடையலாம். பூஜையறை மட்டுமின்றி பீரோ, பர்ஸ், பணப்பெட்டி ஆகியவற்றிலும் கல்லால இலையை வைத்து வணங்கி வரலாம். – Source: vikatan
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
