மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

0

தற்போதைய நிதிக் கொள்கைகளுக்கு அமைய அடுத்த வருட இறுதியாகும் போது பணவீக்கத்தை 4 -5 சதவீதம் அளவில் பேணமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களின் மிதக்கும் வட்டி வீதத்தின்கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு அறவிடப்படும் வட்டி வீதத்தை அதிகரித்ததனால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இவ்வாறு வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் ஒரு சில கடன் பெறுநர்களின் முழு சம்பளத்தையும் கடன் தவணைகளுக்கு செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி குறிப்பிட்ட சலுகைக் காலத்துக்கு உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் என்றும், அது தொடர்பில் வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனை கண்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply