“இலங்கையில் தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும்.
சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவைப் போன்று, தற்போது தணிந்துள்ள ஆர்ப்பாட்டங்கள் பாரிய அலையாக மீண்டும் வெளியாகும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அமெரிக்க செனட் சபையில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்கும் செயற்பாடுகளை அரசு இன்னும் கைவிடவில்லை.
அரசின் பழிவாங்கல் செயற்பாடுகளை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும்.
சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவைப் போன்று, தற்போது தணிந்துள்ள ஆர்ப்பாட்டங்கள் பாரிய அலையாக மீண்டும் வெளியாகும். நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கு ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசில் ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வகட்சி அரசை அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெருமளவான தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம். பொதுத் தேர்தலில் எமது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அமையும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



