மின் கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களுக்கு மின்கட்டண அதிகரிப்பு சிரமமாக இருந்தாலும், சபையின் செலவுகளை பார்க்கும் போது இது தவிர்க்க முடியாதது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே எரிசக்தி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக மின்சார சபைக்கு 7600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாகவும், பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் செலுத்த வேண்டிய தொகை 3100 கோடி ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேசமயம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சார சபையினால் செய்யக்கூடிய சில பணிகள் கடந்த காலங்களில் வேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சபையில் உள்ள மாபியாக்களை எதிர்த்து தாம் தனித்து நின்று போராடிய சந்தர்ப்பங்களும் உண்டு எனவும் கூறினார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் , இந்த நிறுவனங்கள் எவ்வித சேவை மதிப்பீடும் இன்றி வருடாந்தம் 25% சம்பள உயர்வை ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் இவை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply