மனிதன் தினமும் விபூதி பூசிக் கொண்டால் இதெல்லாம் கூட கிடைக்குமா?

0

ஒரு மனிதன் பிறந்து எவ்வளவு ஆட்டம் போட்டாலும், கடைசியில் மண்ணுக்குள்ளே சாம்பலாகி போகிறான். இதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த திருநீறு ரொம்பவும் புனிதமானது. சிவபெருமானுக்கு திருநீற்றின் மீது மிகவும் பிரியம் உண்டு. சாம்பல் என்னும் இந்த விபூதியின் பெருமைகளை திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தின் மூலம் இவ்வுலகிற்கு உணர்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘மந்திரமாவது நீறு’ என்று ஆரம்பிக்கும் இப்பாடல் விபூதியின் சிறப்பம்சங்களை பறைசாற்றும் வரிகள் ஆகும். இத்தகைய திருநீற்றை ஒரு மனிதன் தினமும் இட்டுக் கொள்வதால், அவனுக்கு ஐஸ்வர்யம் பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதைப் பற்றி ஈசனிடம் அன்னை பார்வதி தேவி கேட்ட பொழுது அவரே கூறிய இந்த கதையை நீங்களும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள தவறாதீர்கள்.

பொதுவாக பிரம்ம தேவர் உட்பட பல முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் தவம் புரிந்து பெரும் பேரு பெற்றாலும், அவர்களுடைய அடக்கத்தினால் அப்பேறு உண்டானது எனவே இந்த அடக்கத்தை கொடுக்கக் கூடிய திருநீறு மிகவும் மகிமை வாய்ந்தது. ஒருவர் திருநீறு இட்டுக் கொள்வதால் அவர்களுக்கு அடக்கம் தன்னாலே வந்துவிடுகிறது. இதனால் தலைகனம் இன்றி செயல்படவும், இறைவனை அடையவும் அது வழிவகை செய்கிறது.

பார்வதி தேவி ஒரு முறை சிவபெருமானிடம் விபூதியின் மீது இவ்வளவு பிரியம் கொள்ள காரணம் என்ன? என்று ஒரு முறை கேட்டார். அதற்கு சிவபெருமான் கூறிய கதை இது தான். ஒருமுறை பிருகு வம்சத்தில் பிறந்த வேதியர் ஒருவர் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். இவர் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப தவத்தை புரிபவர் ஆவார். மழைக்காலத்தில் மழையில் நனைந்தபடி ஆகாயம் நோக்கி தவம் புரிவார். அதே போல பனிக்காலத்தில் குளிர்ந்த ஜில்லென்று நீரினில் தவம் மேற்கொள்வார். கோடை காலத்தில் தகிக்கும் தனலில் நின்று தவம் புரிவார். இப்படி கடுமையான முறைகளில் தவம் புரிந்து ஈசனின் வரம் பெற மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இவருடைய தவத்தை கண்டு பரிவு கொண்ட பறவைகளும் பழங்களை கொண்டு வந்து அவர் முன்னே வைத்து விட்டு செல்லும். காட்டில் வசிக்கும் கொடிய மிருகங்களும் அவரைக் கண்டு அஞ்சும். அவருக்கு பசி எடுத்தால் மாலை நேரத்தில் இந்த பழங்களை கொஞ்சமாக எடுத்துக் கொள்வார். காலம் செல்ல செல்ல பழங்களை கூட உண்ணாமல் வெறும் இலைகளை மட்டும் உண்டு வந்ததால் அவருக்கு ‘பர்ணாதர்’ என்கிற பெயரும் வந்தது. பர்ணம் என்றால் இலை என்பது பொருளாகும்.

ஒருமுறை தர்ப்பையை பறிக்க சென்ற பர்ணாதருடைய கைகளில் இருந்து ரத்தம் பீறிட்டு ஒழுகிக் கொண்டிருந்தது. தன் தவம் கைகூடியதாக மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க துவங்கினார் பர்ணாதர். இதைக் கண்டு காட்டில் இருக்கும் பறவைகளும், மிருகங்களும் பயந்து அஞ்சின. சிவபெருமான் அப்போது அந்தணர் உருவத்தில் சென்று பர்ணாதரே நீங்கள் இவ்வாறு ஆர்ப்பரிக்க உங்களுடைய அகங்காரம் காரணமா? என்று கேட்டார். அடக்கம் தான் பெரிய பெரிய வரங்களை அருளும் என்பது உனக்கு தெரியாமல் போய்விட்டதா? என்று கூற, பர்ணாதர் பெரிதாக அதை பொருட்படுத்தவில்லை உடனே சிவபெருமான் அவருடைய கையை பிடிக்க வழிந்து கொண்டிருந்த ரத்தம் நின்று, அமிர்தம் பெருகியது. பின்னர் அமிர்தம் விபூதியாக மாறி வழிய துவங்கியது.

இதை கண்ட பர்ணாதருக்கு ஒரே வியப்பு! உடனே அவரது காலடிகளில் விழுந்து, நீங்கள் யார்? என்று கூறுங்கள் என கேட்டான். உடனே ஈசன் உன்னுடைய தவத்தை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இதனால் விபூதியை உன்னுடைய கைகளில் உருவாக்கி பார்த்தேன். கணாதிபர்களில் ஒருவராக உன்னை நியமித்து வரம் தருகிறேன் என்று கூறினார். எனவே இது போல தினமும் விபூதி பூசி கொள்பவர்களுக்கும் தவம் மேற்கொண்ட பலன் கிடைக்குமாம். இதனால் தெய்வமே நேரில் வந்து அருள் புரியும். சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் என்று கூறப்படுகிறது. நாமும் தினமும் விபூதி இட்டுக் கொள்வோம், ஈசனின் அருள் பெறுவோம்.

Leave a Reply