மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 410 கன அடியாக அதிகரிப்பு.

0

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது ஒகேனக்கலில் நேற்று முன்தினம் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இன்று காலை மேலும் அதிகரித்து 16 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 6 ஆயிரத்து 417 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 10 ஆயிரத்து 410 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேலும் நீர்வரத்து இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடபப்டுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

நேற்று 114.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 114.75 அடியானது.

இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply