குறிஞ்சாக்கேணி சம்பவங்கள் இனியும் இடம் பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.

0

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது எனவும் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று (23.11.2021) இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல மாணவர்கள் உட்பட பெற்றோரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
கிண்ணியாவில் (23.11.2021) இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற பல சிறார்கள் பரிதாபகரமாக காவு கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் இது மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.

இந்த இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அரசாங்கம் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்னமும் இதுபோன்று பல பகுதிகளில் பாதுகாப்பற்ற இழுவைப்படகு மூலம் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்பவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இவர்களின் போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும் முகமாக பாலங்களை அமைக்கும் நடவடிக்கையையும் அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply