புரட்டாசி மாதத்துக்கு உரிய தனிச்சிறப்புகள் இவ்வளவா? ஆனந்தம் தரும் அற்புத மாதம் இது!

0

புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம்.

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.

நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.

சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் இருக்கும் தனிச்சிறப்புகள்:

புரட்டாசி சனி : புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும்.

புரட்டாசி அமாவாசை : மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். மஹhளய பட்சம், புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

நவராத்திரி : மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். வீடுகளில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply