கர்ப்பிணிகள் தேங்காய் உடைக்கக்கூடாது ஏன் தெரியுமா? குடும்ப பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்!

0

குடும்பத்தில் லஷ்மி கடாட்சமும், அமைதியும் நிலைத்திருக்க பெண்கள் செய்யக்கூடாத காரியங்கள் சில சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது. பெண்கள் பூசணிக்காயை உடைக்கக்கூடாது. அரிவாளாலோ, கத்தியினாலோ முழுக்காயை உடைக்கலாகாது. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தை தாக்கும்.

இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.
அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக்கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். உணவுக்கு இலை போடும் முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

கையால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது. தன் கணவன் உத்தரவின் பேரில் தான, தர்மம் மற்றும் விரத்தை அனுஷ்டிக்க வேண்டும். எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும், இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.

வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போது அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக்கூடாது. பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக்கூடாது.

அம்மி, உரல் மீது அமரக்கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக்கூடாது. கஷ்டம் வரும்போது அசப்தங்களைக் கூறக்கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது. மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூற தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே, தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக்கூடாது.

பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக்கூடாது.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply