நாம் செய்த புண்ணியங்களின் பலனாக சாய்பாபாவை வழிபாடு செய்வது எப்படி?

0

ஜென்ம ஜென்மங்களாக நாம் சேமித்து வைத்த புண்ணியங்களின் பலனாகவே நாம் சத்குரு சாய்பாபாவை வழிபட ஆரம்பித்திருக்கிறோம். அவர் நமக்கு இவ்வுலக வாழ்க்கையில் நாம் வாழ வேண்டிய முறைகளையும், அதன் விளைவாக நாம் எப்படி இறைவனை அடைவது? இறை உணர்வைப் பெறுவது எப்படி? என்பதையும் ஸ்ரீ சாயி சத்சரிதம் மூலமாக நமக்கு விளக்கிக்காட்ட முன் வருகிறார்.

சாய்பாபாவின் இந்த வழிகாட்டலை நாம் தெரிந்து கொள்வது எப்படி? இதற்கு சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம் நமக்கு உதவுகிறது. இந்த பிரார்த்தனை மையத்தின் நோக்கமே சாய்பாபா காட்டும் வழிகளை உங்களுக்கு சுட்டிக் காட்டுவதே ஆகும்.

சத்குரு சாயி கூறுகிறார் ‘மேலே செல்ல (வாழ்க்கையில் இறைவனை அடையும் நோக்கத்தில்) பல வழிகள் உள்ளன. இங்கிருந்தும் (சீரடி) ஒரு வழி உள்ளது.

யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டனவோ, அந்தப் புண்ணியசாலிகளே என்னை அறிந்து கொள்கிறார்கள். என்னை வழிபடுகிறார்கள். (ஸ்ரீசாயி சத்சரிதம் 13/11)

சாயி அன்பர்களே! பாபா உடலை வருத்தி, உபவாசம் இருப்பதை விரும்பவில்லை. அதை அவர் ஆதரிக்கவில்லை. வெறும் சடங்குகளாக இயந்திரகதியில் செய்யப்படும் பூஜை முறைகளை, சடங்கு, சம்பிரதாயங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை.

சடங்குகளாகச் செய்யப்படும் பூஜையைவிட மனதால் செய்யும் பூஜையாலே உம்மை மகிழ்ச்சி பெறச் செய்வோம் (ஸ்ரீ சாயி ச.ச 26/28) எனக்கு எட்டுவிதமான பூஜை முறைகளோ, பதினாறு வகையான பூஜையோ வேண்டாம். எங்கு (ஙிபிகி) பாவம் (உணர்வு) இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன் (அத் 13-13) ஆகையால் ஆத்ம சுத்தியோடு நாம் சீரடி சாய்பாபாவிடம் நம்பிக்கை வைத்து மனமார பிரார்த்தனை செய்வதன் மூலமே அவரது கருணைக்கு அருகதை உள்ளவர்களாவோம். இப்படிப்பட்ட பிரார்த்தனைகள் மூலம் அவர் அருளைப் பெற முடியும்.

‘உயிரினங்கள் எல்லாவற்றிலும் என்னைப் பார்ப்பவனையே நான் விரும்புகிறேன். அதுவே என்னை வழிபட சிறந்த முறை (அத் 9-30) என்கிறார் சாய்பாபா.

சத்சரிதத்தில் அவரைப் பற்றி கூறப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளுங்கள். ‘அவருக்கு கோழியோ, ஆடோ பலியிடத் தேவையில்லை. பணமும் சமர்ப்பிக்கத் தேவை இல்லை. நேர்மையான அன்பிற்காகவும், விசுவாசத்திற்காகவுமே அவர் பசி கொண்டார். அதன் பின் அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்து போயின (அத் 11-124)

சடங்குகளுடன் செய்யும் பூஜையைவிட மனதால் செய்யும் பூஜையாலே உம்மை மகிழ்வடையச் செய்வோம் (அத் 26-28). கண்கண்ட தெய்வமாகவும் லவுகீக, ஆன்மீக வாழ்வில் நமக்கு வழிகாட்டிடும் சத்குரு சாயி நாதரிடம் எப்படி பிரார்த்தனை செய்வது? நாங்கள் அறிந்து கொண்டதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம் என்றார் தி.நகர் சரோஜினி தெருவில் உள்ள சாய்பாபா பிரார்த்தனை மைய நிறுவனர் பேராசிரியர் திருவள்ளுவன். அவர் கூறியதாவது:-

சாய்பாபாவை வழிபடுவது எப்படி

இதை நான்கு படிகளாக செய்ய வேண்டும். முதலில் பாபாவிற்கு நன்றி கூற வேண்டும். இன்று நமக்கு கிடைத்திருக்கும் வசதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றை, அவை சிறியதாக இருந்தாலும் அவற்றை நமக்கு கொடுத்ததற்காக நன்றி கூற வேண்டும். பண வசதியில், படிப்பில், அந்தஸ்தில், வேலை வாய்ப்புகளில், பதவிகளில், வீட்டு வசதியில் நம்மைவிட கீழ் நிலையில் உள்ளவர்களைவிட, மேலான நிலையில் நம்மை வைத்திருப்பதற்கு பாபாவிற்கு நன்றி கூறவேண்டும். எத்தனையோ குருமார்கள் இருந்த போதிலும் அவரிடம் நாம் நம்பிக்கை வைத்து அவரை வழிபட வைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

இரண்டாவதாக, இதுவரை நாம் தெரிந்தோ தெரியாமலோ உடலால், மனதால், வாக்கால், செல்வத்தால் செய்த கெடுதல்களை இனிமேல் செய்யாமல் விலக்குவோம். நாம் யாருக்கெல்லாம் மனதால், வாக்கால், உடலால், பணத்தால் கெடுதல்கள் செய்தோமோ அந்த ஆத்மாக்கள் அனைவரையும் மனதில் நினைத்து அவர்களிடம் மன்னிப்புக் கோருவோம்.

நம் மனதில் தோன்றும் உட்பகைகளான கோபம், பொறாமை, வெறுப்பு, வஞ்சம் போன்றவற்றால் நம்மால் காயப்பட்ட அத்தனை பேரையும் ஒவ்வொருவராக நினைத்துக்கொள்வோம். அவர்களிடம் மனதளவில் ஆத்மார்த்தமாக நாம் அவர்களுக்கு செய்த கெடுதல்கள், தவறுகளுக்காக நம்மை மன்னிக்க வேண்டுவோம். இனிமேல் மீண்டும் இந்தத் தவறுகளை செய்ய மாட்டோம் என உறுதி கொள்வோம்.

மூன்றாவதாக, பாபாவிடம் நம்முடைய நியாயமான பிரார்த்தனைகளை, வேண்டுகோள்களைக் கூறுவோம். அவற்றை நிறைவேற்றித் தருமாறு வேண்டுவோம். நம்முடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் காத்திருக்கிறார். உங்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை (நியாயமானவைகளை) அவர் நிறைவேற்றித்தர காத்திருக்கிறார். உரிமையோடு கேளுங்கள், உறுதியாக நிறைவேற்றித் தருவார் பாபா.

நான்காவதாக நமக்காக மட்டுமின்றி நமக்கு தெரிந்த நம் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் உலகில் உள்ள அனைவரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித் தருமாறு அவர்களுக்காகவும் சாய்பாபாவிடம் வேண்டுவோம்.

இப்படியாக தினமும் இரவு படுக்கப்போகும் முன் ஒரு பத்துநிமிடம் இதே வரிசைப்படி இந்த நான்கு பிரார்த்தனைகளையும் மனதில் சாய் பாபாவை எண்ணிக்கொண்டே கூறுங்கள். விரைவில் உங்களினுள்ளே ஒரு மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

எங்கள் தியான மையத்தில் வியாழன் மற்றும் ஞாயிறு தோறும் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் இந்த வழியிலேயே பிரார்த்தனை செய்கின்றனர். அதன் காரணமாக ஆச்சரியப்படும் வகையில் அவர்களுக்கு மனங்களில் நிம்மதி, சாந்தி, சந்தோஷம் ஆகியவை கிடைக்கின்றன. அவர்கள் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன.

இந்த வகையில் பிரார்த்தனை செய்யச் செய்ய உங்களுக்கும் ஒரு ஆத்ம சுகம் கிடைக்கும். கவலை தோய்ந்த முகத்துடன் பிரார்த்தனை செய்ய வந்தவர்கள் விரைவில் கவலைகள் நீங்கி, முகங்களில் ஒளி, உள்ளங்களில் அமைதி, ஆனந்தம், புத்துணர்வு ஆகியவற்றை பெற்றதாகக் கூறுகிறார்கள். இனி, அவர்களது மனக்கதவை திறந்து சுலபமாக தீயசக்திகள் உள்ளே நுழையாது.

இது தான் எங்கள் தியான மையத்தில் பாபா நிகழ்த்தும் அற்புதம், நீங்களும் இதைப் பெற வேண்டாமா? வாருங்கள் எங்கள் தியான மையத்திற்கு, வந்து கலந்து கொள்ளுங்கள் எங்கள் கூட்டுப் பிரார்த்தனையில், அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கிறோம்.

சரி! பாபா கூறிய முக்கிய வாழ்க்கை முறைகள் என்னென்ன?படியுங்கள்.

1. வீண் விவாதம் வேண்டாம், எதற்கெடுத்தாலும் வாதம் செய்வதோ, மற்றவர்களுடன் போட்டி போடுவதோ நற்குணமன்று (அத் 2-192)

2. எளிமையாக இருங்கள், பகட்டான ஆடைகள் வேண்டாம் (அத் 15)

3. நேர்த்திக்கடன் செய்து கொண்டால் உங்கள் விருப்பம் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனை மறக்காமல் செலுத்திவிடுங்கள் (அத் 15-30)

4. நாயாயினும், பன்றியாயினும், ஈயாயினும் சரி யாரையும் அவமரியாதை செய்யவோ, ஒதுக்கவோ வேண்டாம். முற்பிறவி சம்பந்தமில்லாமல் யாரும் நம்மிடம் வருவதில்லை (அத் 3-81)

5. நேரம் வரும் பொழுது உன் பிரச்சினை தீர்வு செய்யப்படும். அதுவரை பொறுத்திரு (அத் 5-153, 154)

6. தரும நெறியை விட்டு விலகியவர்களின் தொடர்பை தவிர்க்கவும் (அத் 3-78 மற்றும் 79)

7. விரதங்கள் வேண்டாம், உபவாசங்கள் வேண்டாம். உடலை வருத்தவும் வேண்டாம். புனித யாத்திரைகள் வேண்டாம் (அத் 3-18)

8. “சிறிதளவும் கவலைக்கு இடம் கொடுக்காதீர்கள். எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள். மரண பரியந்தம் கவலை வேண்டாம்” (அத் 17-113)

9. பிறர் மனத்தை புண்படுத்தவோ, தாக்கவோ கூடிய சொற்களைப் பேச வேண்டாம் (அத் 19-217)

10. யாராவது உனக்கு கெடுதல் செய்தாலும் அவர்களுக்கு நீ திருப்பி கெடுதல் செய்யாதே. நல்லதே செய் (அத் 10-

இறுதியாக, உங்களிடம் வந்து சேரும் செல்வத்தாலும், உங்களது மனத்தாலும், இறைவன் அளித்த அருள் கொடையான உங்களது உடலாலும் இயன்றவரை பிற உயிர்களிடத்து அன்பு கொண்டு உதவி செய்ய சந்ததியினருக்கு நீங்கள் சம்பாதித்து கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து நீங்கள் இவ்வுலகில் சேர்த்து வைக்கும் புண்ணியங்களே, வாழ்க்கை பயணத்தில் பாவமூட்டையின் பளுவை அதிகமாக்கிக் கொண்டே போகாதீர்கள்.

பாவங்கள் செய்வதை களைந்து புண்ணியங்கள் செய்து வாழ்க்கைப் பயணத்தை இனிதாக்குங்கள். இதை நினைவில் வைத்து வாழ்க்கையை நடத்துங்கள். இனிவரும் நாட்கள் உங்களுக்கு தினமும் திருநாட்களே.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply