45 நாட்களுக்குள் குழந்தை பாக்கியம் பெற சுக்கிர பகவான் வழிபாடு!!

0

ஒரு மனிதன் எத்தனை கோடி செல்வங்கள் பெற்றிருந்தாலும், அவனுக்கென்று திருமண வாழ்க்கை உண்டானால் மட்டுமே அந்த செல்வங்களுக்கு பயன் இருப்பதாக கருத முடிகிறது. அதிலும் அந்த மனிதனுக்கு வாரிசு எனப்படும் குழந்தை செல்வம் கிடைத்தால் மட்டுமே அவனது வாழ்வு முழுமை அடைகிறது. ஆனால் தற்காலங்களில் பலரும் போதிய அளவு செல்வங்கள், வசதிகள் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் மிகுந்த மன வேதனை அடைகின்றனர். செல்வங்களை ஒருவருக்கு மிகுதியாக அருள்பவர் சுக்கிரபகவான் ஆவார். ஜாதகத்தில் சிலருக்கு அந்த சுக்கிரபகவான் காரணமாக சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலை ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்குமானால் அந்த ஜாதகத்திற்குரிய நபர் ஆணாக இருந்தால் முற்பிறவியில் ஒரு பெண்ணை காதலித்து, பின்பு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாலும், காதலித்த அப்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாலும், அப்பெண்ணின் சாபத்தைப் பெற்று இப்பிறவியில் புத்திர தோஷம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். அதே போன்று ஜாதகத்திற்குரிய நபர் பெண்ணாக இருப்பின் முற்பிறவியில் தனது காதலனை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாலும், அந்த காதலன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாலும், அந்த ஆணின் சாபத்தை சாபத்தைப் பெற்று இப்பிறவியில் புத்திர தோஷம் ஏற்பட்டுருப்பதை உறுதி செய்யலாம். சுக்கிர பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து சுக்கிர பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.

200 கிராம் வெள்ளை மொச்சை பருப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை சமபாகமாக பிரித்து, ஒரு வெள்ளை துணியை ஒன்பது துண்டுகளாக வெட்டியெடுத்து, பிரித்து வைத்த மொச்சை பருப்புகளை ஒன்பது துணிகளில் போட்டு முடிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒன்பது துணி முடிப்புகளையும் உங்கள் வீட்டு பூஜையறையில் சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அத்துடன் பிரார்த்தனை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும். பூஜையறையில் இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சுக்கிர பகவானை மனதில் நினைத்து “சுக்கிர பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும்” என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.

இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது வெள்ளை மொச்சை பருப்புகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு சுக்கிர கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக சுக்கிர பகவான் அருள் புரிவார்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply