அற்புதங்கள் பல செய்த சீரடி சாய்பாபா…!

0

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் உள்ள சீரடி எனும் அந்த கிராமத்தில் ஒரு மிகப்பழமையான மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் பின்பக்கம் ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒரு எட்டு வயது குழந்தை தியானம் செய்து கொண்டிருந்தது. அந்த குழந்தையின் முகத்தில் அருள் ஒளி வட்டம் வீசுவதை கண்ட அந்த கிராமத்துத் தலைவரின் மனைவியார் பாஜ்யாபாய் அந்த குழந்தையைக் கண்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அக்குழந்தை அவருடன் செல்ல மறுத்து தியானம் செய்வதிலேயே ஆர்வம் கொண்டது. அந்த குழந்தை தன்னுடன் வர மறுத்தாலும் அந்தச் குழந்தையிடம் ஏற்பட்ட பாசத்தால் தினமும் உணவு கொண்டு வந்து தருவதாகவும் அதை மறுக்காமல் வாங்கி கொள்ள வெண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த குழந்தையும் சம்மதித்தது.

அந்தத் தாயும் குழந்தைக்குத் தினமும் உணவு கொண்டு வந்து தந்தார். அந்த குழந்தையும் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளும். அவர்களுக்கிடையே தாய், மகன் பாசம் உண்டானது. அந்த வேப்பமரத்தின் அருகிலிருந்த கந்தோபா எனும் ஆலயத்தின் பூசாரி அந்த குழந்தையிடம் இருந்த தெய்வீக அருள் ஒளியைக் கண்டு அந்தச் சிறுவனை “சாய்” என்று அழைத்தார். சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுவன் அந்த ஊரை விட்டு வெளியேறி, ஊர் ஊராக அலைந்து திரிந்து அங்குள்ள கோவில்களில் வணங்கி வழிபட்டான். ஒருநாள் சிறுவன் சாந்து பாட்டீல் எனும் வியாபாரியை கண்டான். அந்தச் சிறுவனின் அருள் தன்மையைக் கண்டு வணங்கிய அவர் தமது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டார்.

சாய் எனும் அந்த சிறுவன் வியாபாரியின் மகள் திருமணத்திற்காக சீரடிக்கு மீண்டும் வந்தான். அப்போது சிறுவனுக்கு வயது பதினாறு ஆகியிருந்தது. சீரடிக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் தான் முன்பு அமர்ந்திருந்த அந்த வேப்பமரம் தேடிச் சென்று அமர்ந்தான். கந்தோபா கோயில் பூசாரிக்கு வேப்பமரத்தடியில் முன்பு தியானம் செய்து கொண்டிருந்த அந்த சாய் மீண்டும் திரும்பி வந்திருப்பதை கண்டார். அந்தச் சிறுவன் அந்த வேப்பமரத்தை விட்டு வேறு ஒரு இடத்திலும் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் அது பற்றி அவரிடமே கேட்டார்கள். அதற்கு அந்த அருள் மிகுந்த சிறுவன் இந்த வேப்பமரமே தனது குரு என்று பதில் கூறினார். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். சிறிது ஆழம் தோண்டியதும் அங்கு உள்ளே ஒரு சிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர் மக்கள் நெய் சிலிர்த்து போனார்கள்.

அந்தச் சிறுவனைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். கடவுளைப் போன்று வழிபட துவங்கினார்கள். அன்றிலிருந்து அந்தச் சிறுவன் அற்புதங்கள் பல நிகழ்த்தத் துவங்கினார். அந்தச் சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் சீரடி மக்கள் பாபா என்பதையும் சேர்த்து “சாய்பாபா” என்று அழைக்கத் துவங்கினார்கள். உலகை உய்விக்கவந்த பாபா இப்படி தான் மக்களிடையே உருவானார். சீரடி சாய்பாபா சீரடியில் அற்புதமான செயல்களைச் செய்து அனைவரையும் நேசிக்கவும் வைத்தார். இவரின் அற்புதங்கள் எல்லா ஊர்களிலும் பரவியது. அவரைத் தேடி பல ஊரிலிருந்தும் மக்கள் வரத் துவங்கினார்கள்.

அவரும் அனைவரது துயரங்களுக்கும் விடியலாக பல அற்புதங்களைச் செய்து மகிழ்ச்சியடையச் செய்தார். அவர் வேப்பமரத்தடியில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வந்தாலும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கிக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்கும் உரியவரானார். எனவே இரு மதத்தினருக்கும் மத அடிப்படையிலான ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி மத வேற்றுமைகளை நீக்கினார். இதனால் சாயிடம் இரு மதத்திலிருப்போரும் ஈடுபாடு கொண்டனர். அற்புதங்கள் பல செய்த சாய்பாபாவிற்கு வக்கீல் பட் என்பவர் அறிமுகமானார். அவர் சாய்பாபா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். சாய்பாபா அவரிடம் தான் ஜீவசமாதி அடைவதற்காக வீடு ஒன்று கட்டித் தரும்படி கேட்க அப்படியே அவரும் வீடு கட்டித் தந்தார்.

சாய்பாபா அந்த வீட்டில் அப்துல் என்ற ஏழை பக்தரை தனக்கு உதவி செய்வதற்காக தன்னுடன் வைத்துக் கொண்டார். இறுதியில் அனைவருக்கும் அருள் செய்த அந்த மகாகுரு 1918 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். இன்றும் ஏராளமான மக்கள் நம்பிக்கையோடு சீரடிசாய்பாபாவை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அடுத்து இந்த சீரடி சாய்பாபாவின் தலத்திற்கு வருபவர்கள் தான் அதிகம். சாய் நம்பும் பக்தரை காக்கும் தெய்வம். அவரின் பாதம் பணிவோம்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply