சாயி நம்மைவிட்டு நீங்குவதில்லை… எப்போதும் உடனிருக்கிறார்… நெகிழ்ச்சி அனுபவம்!

0

இறைவன் எங்கோ சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கத்தில் இருப்பவர் என்கிற எண்ணமே பக்தர்களை அவரிடமிருந்து பிரித்து வைக்கிறது. சகல உலகையும் உருவாக்கிய இறைவன் நமக்குள்ளும் உறைந்திருக்கிறான் என்கிற எண்ணமும் பயமும் வந்துவிட்டால், இந்த உலகில் எல்லோர் செயல்களும் நன்மையை நோக்கி நகரத் தொடங்கிவிடும். ஆனால், எல்லோருக்குள்ளும் இருக்கும் சந்தேகம், குறைகளும் குற்றங்களும் நிறைந்த நமக்குள் இறைவன் உறைவானா என்பதுதான். குழந்தைகள் பிழை செய்கிறார்கள் என்பதற்காகப் பெற்றோர் அவர்களைவிட்டு விலகிவிடுகிறார்களா என்ன..? பாபா அடிக்கடி அவர் பக்தர்களிடம் உபதேசம் செய்யும் ஒரு விஷயம், ‘எப்போதும் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்பதுதான்.

பாபா எந்த அளவுக்கு கோபமாகக் கடிந்துகொண்டு, வசைச்சொற்களால் திட்டுவாரோ அதே அளவு நகைச்சுவை உணர்வோடு அவர் பக்தர்களோடு விளையாடி ஞானம் புகட்டிக்கொண்டேயிருப்பார். துவாரகாமாயியில் ஒருமுறை பாபா, பக்தர்களான வாமன்ராவ், அண்ணா ஹேமத் பந்த், ஷாமா ஆகியோரோடு அமர்ந்திருந்தார். அப்போது ஷாமா, அண்ணா சாஹேப்பிடம், “அண்ணா உங்கள் மேல்சட்டையில் பாருங்கள், தானியங்கள் இருக்கின்றன” என்றார். உடனே, அண்ணா அவசர அவசரமாகத் தன் மேல் சட்டையை உதறினார். அப்போது தானிய மணிகள் சிதறி ஓடின. இவ்வளவு நேரம், இவ்வளவு தானிய மணிகள் எப்படி சட்டையில் இருந்தன என்பது ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் அதைக்கண்டு சிரித்தனர்.

அப்போது பாபா ஷாமாவை நோக்கி, “இந்த ஆள் தனியாகத் தின்னும் பழக்கம் உள்ளவர். இன்று சந்தைக்குச் செல்லும்வழியில் தனியாகத் தின்றுகொண்டே வந்தார்” என்றார். உடனே அண்ணாவுக்கு வெட்கமாகப் போயிற்று. அவர் வருத்தம் தொனிக்கும் குரலில்,
“பாபா, என்னை ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நான் ஒருமுறைகூட என் அருகில் இருப்பவர்களுக்குத் தராமல் உண்டதேயில்லையே… நீங்கள் சொல்வதுபோல் இன்று நான் சந்தைக்குச் செல்லவேயில்லை. அதன் திசைகூட எனக்குத் தெரியாது. நான் எப்போது அடுத்தவர்க்குக் கொடுக்காமல் உண்டேன்?” என்று கேட்டார்.

பாபா அவரைக் குளிர்விக்கும்விதமாகத் தன் கரங்களை உயர்த்தி அமைதிப்படுத்தினார். பின்பு,

“அண்ணா சாஹேப், நீ அருகில் இருப்பவர்களுக்குக் கொடுத்து உண்பது உண்மைதான். ஆனால், யாரும் அருகில் இல்லையென்றால் நீதான் என்ன செய்ய முடியும்… நான்தான் என்ன செய்ய முடியும்” என்ற பாபா ஒரு கணம் நிறுத்தி மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்.

“எப்போதாவது நீ உண்ணும் முன் என்னை நினைத்திருக்கிறாயா? நான் உன்னோடு எப்போதும் இருக்கவில்லையா என்ன…” என்றார்.
ஹேமத்பந்த்க்கு அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. ஹேமந்துக்கு மட்டுமல்ல, நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. அது, ‘பாபா எப்போதும் நம்மோடே இருக்கிறார்’ என்பதுதான்.

துன்பங்கள் சூழ்கிறபோது, பிரச்னைகள் தலைதூக்குகிறபோது நாம் சாயி நம்மோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சாயியும் அவ்வாறே இருந்து நம்மைக் காக்கிறார். ஆனால், அவை அகன்றபின்பு நாம் சாயி நம்மோடு இருப்பதை உணர்கிறோமா ?

நம்வீட்டில் மதிப்புமிக்க ஒரு பெரியவர் நம்மோடு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தினமும் அதிகாலையில் அவரைக் கண்டு வணங்குவோமா இல்லையா… நாம் உணவு உண்ணும் போதும், ஏதேனும் அருந்தும்போதும் அவரை ஒருவார்த்தை கேட்டு விசாரிப்போமா இல்லையா… அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் மனம் வருந்தமடைவார் அல்லவா… அப்படித்தான் பாபா உரிமையோடு அண்ணா சாஹேப்பிடம் நகைச்சுவையாகச் சொல்லி விளையாண்டார்.

பாபாவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஹேமத்துக்கு, புராணகால சுதாமாவின் நினைவு வந்துவிட்டது. சுதாமா, கிருஷ்ணர், பலராமர் மூவரும் குருகுலத்தில் பயின்ற காலத்தில் அவ்வப்போது ஆசிரமத்துக்குத் தேவையான விறகுகளை வெட்டிக்கொண்டுவரக் காட்டுக்குள் செல்வதுண்டு. அப்படிச்செல்லும்போது அவர்களின் குருநாதரின் மனைவியான சாந்தீபனி, மூவரும் தின்னக் கொஞ்சம் கடலைகளைக் கொடுத்து அனுப்புவது உண்டு. அவ்வாறு ஒருமுறை சுதாமாவிடம் கடலைகளைக் கொடுத்து அனுப்பினார்.
பலராமர் விறகு வெட்டிக்கொண்டிருந்தார். கிருஷ்ணருக்கோ களைப்பு ஏற்பட்டது. சுதாமாவின் மடியில் படுத்து உறங்கினார். அப்போது சுதாமா, கடலைகளை உண்டார். கடலைகளை மெல்லும் சத்தத்தில் விழித்துக்கொண்ட கிருஷ்ணர், “எனக்கு உண்ண ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார். ஆனால், சுதாமாவோ கடலைகளைத் தின்றுதீர்த்துவிட்டதால், “ஒன்றும் இல்லை கிருஷ்ணா. குளிரில் என் பற்கள் நடுங்கும் சப்தம்தான் நீ கேட்டது” என்று பொய் சொன்னார்.

சுதாமா தன் மடியில் படுத்துறங்கும் கிருஷ்ணரிடம் பொய் சொல்லவில்லை, சகல ஜீவன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பகவானிடம் அல்லவா பொய் சொன்னார்… அதன்பலனாக அவர் வாழ்வில் அடைந்த துயர்கள் அதிகம். மறுபடியும் அவர் கிருஷ்ணரின் கருணையை எதிர்பார்த்துச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், பகவானோ அப்போது முகமலர்ச்சியோடு வரவேற்று அவருக்கு உதவினார்.

பாபாவும் அப்படித்தான். எப்போதும் நம்முள்ளே இருந்து நம்மைக் காக்கிறார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பான ஒரு விசாரிப்பைத்தான். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply