தன் குழந்தைகள் பட்டினி இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா

0

சீரடி சாய்பாபாவை நேசிக்கும் பக்தர்கள் வியாழன்தோறும் அவரை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஒரு வேளை மட்டும் உண்ணமல் இருப்பார்கள். ஒரு சிலர் வியாழக்கிழமை முழு நாளுமே பட்டினி கிடந்து பாபாவை வழிபடுவதும் உண்டு. தாயுள்ளம் கொண்ட பாபாவிற்கு, தன் குழந்தைகள் யாரும் பட்டினி கிடப்பது பிடிக்காது. எப்போதும் அவர் பட்டினி இருந்து தன்னை வழிபடுங்கள் என்று சொன்னதே இல்லை. அவரைக் குறித்த வழிபாடுகளில், பட்டினி கிடந்து விரதம் இருப்பதற்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.
பாபா தம் வாழ்நாளில் ஒரு போதும் பட்டினி இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினி இருக்க என்றும் அனுமதித்ததே இல்லை. பட்டினி கிடந்து வழிபாடு செய்யக்கூடாது என்பதை பல தடவை, பல சம்பவங்கள் மூலம் பாபா உணர்த்தியுள்ளார்.

சீரடியில் பாபா மிகவும் நேசித்த சிறுவனின் பிறந்த நாள் விழா, மாதவராவ் தேஷ்பாண்டே என்பவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க பாபாவின் பக்தர்களில் ஒருவரான பாலா சகேப் பாடே என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால் அவர் பிறந்த நாள் விழாவுக்கு செல்லவில்லை. அதற்கு பதில் அவர் பாபாவைப் பார்க்க மசூதிக்கு வந்தார். பாபா அவரிடம், “என்ன…. பிறந்த நாள் விழா எப்படி இருந்தது? சாப்பாடு சிறப்பாக இருந்ததா?” என்று கேட்டார்.

அதற்கு பாலா சாகேப் பாடே, “இன்று வியாழக்கிழமை அல்லவா? எனவே நான் பிறந்தநாள் விழாவுக்கு செல்லவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார். உடனே பாபா, “ஏன்.. வியாழக்கிழமை என்றால் என்ன…சாப்பிடக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாடே கூறுகையில், “வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும். அன்று நான் சாப்பிடுவதில்லை. இதை நான் ஒரு வழக்கமாக வைத்து இருக்கிறேன்” என்றார்.

இதைக் கேட்டதும் சாய்பாபா சிரித்தார். “இது யார் வகுத்த விதி. யாரை திருப்திப்படுத்த இந்த விதியை கடைபிடிக்கிறீர்கள்?” என்றார். அதற்கு பாலா சாகேப், “நான் வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என் குரு நீங்கள்தான். உங்கள் அருளைப் பெற, உங்களை திருப்திப்படுத்தவே நான் வியாழக்கிழமை விரதம் இருக்கிறேன்” என்றார்.

பாபா அவரையே உற்றுப் பார்த்தார்..” என்னை இன்று நீ திருப்திப்படுத்த வேண்டுமானால் நான் என்ன சொல்கிறேனோ, அதை செய்ய வேண்டும்” என்றார். உடனே பாலா சாகேப், “என்ன செய்ய வேண்டும். உங்கள் உத்தரவை ஏற்க தயாராக உள்ளேன்” என்றார்.அவரிடம் “மாதவராவ் வீட்டுக்குச் செல். அங்கு நடக்கும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விருந்தில் சாப்பிட்டு விட்டு வா” என்று பாபா உத்தரவிட்டார்.

பாலா சாகேப் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். பாபா விடவில்லை. “நான் உன்னோடுதான் இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்காதே” என்றார்.பாபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட பாலா சாகேப், உடனே பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டார். அன்று முதல் பாபாவை நினைத்து விரதம் இருக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டார்.

பாபாவின் உபதேசங்களை பின்பற்றுபவர்கள் யாரும் தங்களை கடுமையாக வருத்திக் கொண்டு உண்ணாநோன்பு இருப்பதில்லை. இதற்கும் அவரே ஒரு மாற்று வழியை கூறுகிறார். உண்ணாநோன்பு இருப்பதற்கு பதில், ஒன்று அவருக்கு தினமும் மறக்காமல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம் அல்லது வியாழக்கிழமைகளில் பாபா ஆலயங்களில் தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம். பாபா இதைத்தான் விரும்புகிறார்.அன்னதானம் செய்பவர்களை பாபா மிகவும் நேசிக்கிறார். – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒம் சாய் ராம்…

Leave a Reply