இராம நாம மகிமை இராமனுக்கே தெரியாதா?

0

இறைவனை வணங்க வேண்டிய இடங்கள் கோயில், பூஜையறை மட்டும் தான் என்று நினைக்காதீர்கள். 24 மணி நெரமும் உங்கள் மனம் ஒத்துழைத்தால் இறைவனது திருநாமங்களை ஜபித்துக் கொண்டே இருங்கள். இறைவனை விட அவனது திருநாமத்துக்கே சக்தி அதிகம். அவற்றிலும் நாமத்திலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ இராம நாமம்தான். இராமனுக்கே இதைப் புரிய வைத்தவர் இராம பக்தரான அனுமன்.

இராவணனிடமிருந்து சீதையை மீட்டு வர ஸ்ரீ இராமன் இலங்கை செல்வதற்கு வானரங்கள் பாலம் அமைத்துக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. வானரங்கள் தொய்வின்றி இத்தகைய பணியைச் செய்வதை அனுமன் முன் நின்று கவனித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது அனுமன் மற்ற வானரங்களுக்கு பாதை காட்டிக் கொண்டிருந்தார்.

”தோழர்களே கடலில் விழும் கற்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்தால் பாதை அமையாது. கற்கள் ஒன்றோடொன்று ஒட்டி இருக்க வேண்டும். கவனம் ஒன்றின் மீது ஒன்று நிற்ககூடாது” என்று ஒரு கல்லை தூக்கி கடலில் போட்டார். ”இப்போது கவனமாக பாருங்கள்” என்று மற்றொரு கல்லை தூக்கி போட்டார்.

முதலில் இட்ட கல்லுக்கு பக்கத்தில் நெருக்கமாக ஒட்டி அமர்ந்தது இரண்டாவது கல்.. ”நல்லது.. ஆனால் இதேபோல் எங்களால் எப்படி ஒரே மாதிரியாக இவ்வளவு நீண்ட பாதைக்கு கற்களை சரியாக இட முடியும்?” என்று கேள்வி எழுப்பியது மற்ற வானரங்கள். அனுமன் சட்டென்று பதிலுறுத்தார். ”ஸ்ரீ இராம நாமம் இருக் கிறதே” என்றார். வானரங்களுக்கு மகிழ்ச்சியும் அதே நேரம் வேதனையும் உண்டானது. அனுமன் வானரங்களின் முகத்தைப் பார்த்தார்.

”ஏன் எல்லோரும் அமைதியாகி விட்டீர்கள். ஸ்ரீ இராம நாமம் பலனளிக்காது என்கிறீர்களா?” என்றார். ”இல்லை.. ஸ்ரீ இராம நாமம் நினைத்து செய்யும் காரியம் தடைபடாது என்பதை எப்படி மறந்துவிட்டோம் அதுதான் எங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது” என்றது மற்ற வானரங்கள். ”சரி பணிகளைத் தொடங்குங்கள்” என்றார் அனுமன். எல்லா வானரங்களும் கடலில் கற்களைத் தூக்கிப்போட்டது. ஒவ்வொரு கல்லும் சரியாக முன்பிருந்த கல்லின் பக்கத்தில் அழகாய் விழுந்தது. மனதிற்குள் இராம நாமம் ஜபித்தப்படி அனுமனும் இதைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

ஸ்ரீ இராமன் வந்தார். அட வானரங்கள் இடும் கற்கள் எவ்வளவு அழகாக கடலில் விழுந்து பாதையை அமைக்கிறது என்று வியந்தார். அவர் தான் மனிதப் பிறவியாயிற்றே. அவர் மனதிலும் ஆசை உண்டானது. நானும் செய்கிறேனே என்று அனுமாரிடம் குழந்தைப்போல் சொல்லி ஒரு கல்லை தூக்கி கடலில் போட்டார். அந்தக் கல் பாதை மீது அமராமல் ஓடும் நீரில் அடித்து சென்றுவிட்டது. இராமரின் முகம் வாடிவிட்டது.அனுமன் அனைத்தையும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

இராமரின் முகவாட்டம் தாங்காமல் அருகில் வந்த அனுமன்.. ”என்னாயிற்று சுவாமி.. ஏன் கவலையுற்று இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”இல்லை நீங்கள் இடும் கல் எல்லாம் பாதை அமைக்கிறதே.. அவ்வளவு நுணுக்கமான வேலையை என்னால் கற்க முடியவில்லையே” என்றார்.. ”நுணுக்கமான வேலையில்லை சுவாமி.. நாங்கள் எல்லோரும் ராம் ராம் என்று உங்கள் திருநாமத்தை சொல்லி போட்டதால் கற்கள் சரியாக பாதையில் அமர்ந்தது. நீங்கள் ராமனாகவே இருந்தாலும் ராம் ராம் என்று சொல்லிபோட்டிருந்தால் உங்கள் கற்களும் சரியாக பாதையில் அமைந்திருக்கும்” என்றாராம்.- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply