எதிலும் வெற்றி பெற அருள்வாள் துர்க்கை அம்மன் வழபாடு..!

0

வெற்றிகளை அள்ளித்தரும் துர்க்கா தேவி, கொற்றவையின் அம்சம். சிவனுக்கு உகந்த இந்த துர்க்கை, எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு இடப்புறம் தனக்கென்று ஓர் இடம் பிடித்து, வடக்கே முகம் காட்டி அருள்மழை பொழிபவள். அந்த வகையில் புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம், கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள மடுகரை என்ற கிராமத்தில் தனியே கோயில் கொண்டு, தன்னாட்சி நடத்துகின்றாள் துர்க்கை. வித்தியாசமாக இத்தலத்தில் இவள் கிழக்கே திருமுகம் காட்டி எழுந்துள்ளாள். எட்டு கரங்கள் கொண்டு சிம்மத்தின் மீது வீற்றிருந்து பக்தர்களைக் காத்திடும் காவல் தெய்வமாய் காட்சியளிக்கிறாள். இந்த துர்க்கை, கோயில் கொண்ட நாள் முதல் பக்தர்களது கனவில் வந்து, அவர்களிடம் பேசி, அவர்கள் குறைகளை களைவது வழக்கம். அப்படியொரு நாள் இரவு தனது கோயிலுக்கு அருகே வந்த ‘இருசப்பன்’ என்ற பக்தனைத் தட்டி எழுப்பி தனது சூலாயுதத்தை திருடன் ஒருவன் திருடிக்கொண்டு ஏரிக்கரை மீது செல்வதாகச் சேதி சொன்னாள்.

உடனே ஊரார் துணையோடு ஓடிச்சென்ற இருசப்பன் சூலத்தை மீட்டு வந்தான். இப்போது அந்த சூலாயுதம் சுதை வடிவ துர்க்கையின் கரத்தில் தவழ்கிறது. இதுபோன்ற அற்புத சம்பவங்கள் இவளால் இங்கு நித்தமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னைக்கு விளக்கேற்றி, குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் குறைகளைக் களைந்து அன்பர் வாழ்வில் குதூகலத்தை ஏற்படுத்தும் அன்னை இவள். அதோடு, இங்கு தனியே சனீஸ்வர பகவான் எழுந்தருளி அனுகிரகம் செய்வதால், இவர் அனுக்கிரக சனி எனப் போற்றப்படுகின்றார். எங்குமே காணக் கிடைக்காத வட்ட வடிவ அமைப்பில் நவகிரகங்களை இங்கு தரிசிக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகின்றன.

நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் மிகவும் கோலாகலமாக இருக்கும். நிவேதன பிரசாதத்தோடு, குங்குமமும், வளையலும் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்பது நாளும் ஒன்பது வகையான அலங்காரத்தில் அன்னை அஷ்டபுஜ துர்க்கை இங்கே அழகாய் திகழ்வாள். பக்தர்களிடம் நேரில் பேசும் இந்த எட்டுக்கர துர்க்கையை வழிபட, திருமணத்தடை நீங்கும். பிள்ளை வரம் கிட்டும். வழக்குகள் வெற்றியாகும். வம்புகள் தீரும். செல்வ வளம் கூடும். சிறப்புகள் வந்து சேரும் எங்கும், எதிலும் வெற்றி பெறலாம். எதிரிகள் நடுங்குவர். விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் பேருந்து களில் மடுகரை வரலாம். நெடுஞ்சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளதால் இங்கு வருவது மிகவும் சுலபமாகும்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply