
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது ஆடிப்பூரம் அன்று நாம் பாராயணம் செய்து, வந்தால் ஆண்டாள், அரங்கன் திருவருள் கிடைப்பது நிச்சயம்.
ஆண்டாள் – அரங்கனின் திருவருளை பெற ஸ்லோகம்
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

– திருப்பாவை
பொதுப் பொருள்: மகாபலிச் சக்ரவர்த்தியின் தான கர்வத்தை அழித்து, அவனளிப்பவை மட்டுமல்லாமல் அவனும் உனக்குரியவன்தான் என்பதை மூன்றடிகளால் உணர்த்திய திருமாலே நமஸ்காரம். சீதையை மீட்க, தெற்குப் பகுதியில் உள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வென்று வெற்றி கொண்டு வீரத்தை நிரூபித்த ஸ்ரீராமபிரானே நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தி மக்களைக் காத்து புகழ் பெற்றவனே நமஸ்காரம்.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை அப்படியே பற்றி, விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து இரு அரக்கரையும் ஒருசேர அழித்தவனே, வீரக்கழல் அணிந்த உன் கால்களில் நமஸ்காரம். கோவர்த்தனகிரியை குடையாக்கி இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து ஆயர்குலத்தவரைக் காத்தவனே, உன் கருணை மனதுக்கு நமஸ்காரம். பலம் மிக்கப் பகைவர்களையும் உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே, அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம். – Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
