
அணையாத தீபம் கொண்ட சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை அம்மன் ஆலயம். அடியார்களையே அர்ச்சகர்களாகவும், பெண் அர்ச்சகர்களையும் கொண்ட ஆலயம், சமயப் பணியோடு, கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளையும் மேற்கொள்ளும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சென்னை பள்ளிக்கரணை அன்னை ஆதிபராசக்தி ஆலயம்.
அதர்மங்கள் தலை தூக்கி, ஆன்மிகத்திற்கு குறைவு ஏற்படும் போது, அதனைச் சரி செய்ய சித்தர் பெருமக்கள், தங்களின் பேராற்றல் வாயிலாக, நற்செயல் புரிவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மக்களின் தீமைகளை ஒழித்து, நன்மைகள் ஓங்கிட, சித்தர்களின் எண்ணத்தில் தோன்றிய ஆலயமாகத் திகழ்வது, அன்னை ஆதிபராசக்தி கோவில்.
எதிரிகளின் தொல்லைகளைக் களைந்து, நல்வழி காண, சித்தர்கள் தேரையரை நாடிய பின்பு, தம் குழுவோடு தியானத்தில் அமர்ந்து, ஆத்ம சக்தியான பராசக்தியையும், சிவபெருமானையும் வணங்கினர். அதன்பின் மனோ சக்தியினால் நுண்ணிய அதிர்வுகளை மந்திரங்களாக்கினர். அந்த மந்திரங்களுக்கு உரிய துடி சக்திகள், காப்பு சக்திகள், இவர்களுக்குரிய கோணங்களாக்கி உரிய பீஜ மந்திரம் அளித்து, ஒரு யந்திரத்தை உருவாக்கினர்.
அந்த பீஜ சக்தி பேராற்றல் பெற்று, இணையில்லாத அழகிய சக்தியாக செயல்படத் தொடங்கியது. அந்த சக்திக்கு, அந்த யந்திர சக்தியை வெளிப்படுத்தும் வடிவம் தந்து, அந்த பேராற்றலை வெளிப்படுத்தும் சக்தியாக, உருவ வடிவில் பாவை சிற்பத்தை வடிவமைத்தனர். அந்த பாவை சிற்பத்தை தாங்கள் தியானம் செய்கின்ற இடங்களில் அமைத்து, வழிபட்டு யோகம் செய்தனர். அந்த பாவை சிற்பமே மந்திரப் பாவையாகும்.

சித்தர் பெருமக்களின் நற்கருணையால், இப்பூவுலகில் பள்ளிக்கரணை ஆதிபராசக்தி ஆலயத்தில் தனிச் சன்னிதியில் தமிழகத்தில் வேறெந்த ஆலயத்திலும் காணப்படாத அபூர்வ சக்தி கொண்ட மந்திரப்பாவை அம்மன் எழுந்தருளியுள்ளார். மந்திரப்பாவை அன்னை வடக்கு முகமாக கட்சி தர, கருவறையின் வெளிப்புறம் அகத்தியர், கருவூரார், தேரையர், இடைக்காடர், அழுகண்ணர், சட்டைமுனி, புலத்தியர், போகர், காளங்கிநாதர், சிவவாக்கியர், மச்சமுனி, புலிப்பாணி, திருமூலர், கொங்கணவர், ராமத்தேவர், பாம்பாட்டிச்சித்தர், பிண்ணாக்கீசர், கமலமுனி ஆகிய பதினெண் சித்தர்கள் சுதை வடிவங்களாக நேர்த்தியாக காட்சி தருகின்றனர்.
இவ்வாலயத்தின் வாசல் வடக்கு முகமாக அமைந்துள்ளது. தீர்த்த விநாயகர் தனிச் சன்னி நம்மை வரவேற்கிறது. அன்னை ஆதிபராசக்தியே இந்த ஆலயத்தின் ஆதி தெய்வம். கருவறையில் அமர்ந்த நிலையில் இரண்டு அம்மன்கள் உள்ளனர். சிறிய அம்மனுக்கே அபிஷேகம் நடைபெறும். பின்புறம் உள்ள அம்மனுக்கு அலங்காரங்களும் ஆராதனைகளும் உண்டு. சிறிய அம்மன் அருள் நிலைக்கும், பெரிய அம்மன் பொருள் நிலைக்கும் ஆதரவானவர்களாக எழுந்தருளியுள்ளனர்.
அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தை கடந்ததும், மந்திரப்பாவை அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கியவாறு அமர்ந்துள்ளார். மந்திரப்பாவை அம்மன் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து, நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையுடனும், மற்ற இரு கரங்கள் ஞான வாள், கேடயம் தாங்கியும் காட்சி தருகின்றார். சிவன் தனிச் சன்னிதியிலும், அரசு வேம்பு மரங்கள் இணைந்தும், அதனடியில் நாகமும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தீர்த்தமான மந்திரப்பாவை தீர்த்தம், சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.
தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, சித்திரைப் பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம், நவராத்திரி ஆகிய விழாக்களும், அமாவாசை பவுர்ணமியில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் படுகின்றன. சக்திமாலை விரதம், மந்திரப்பாவை மங்கல வேள்வி, நவக்கிரக சாப நிவர்த்தி வேள்வி, ஔஷத வேள்வி, ஐஸ்வர்ய வேள்வி, மற்றும் 60, 80 வயது பூர்த்தி வேள்விகள் உள்ளிட்ட பல்வேறு வேள்விகளும் சித்தாகம முறைப்படி, தமிழில், மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.
வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் பள்ளிக்கரணை அமைந்துள்ளது. பள்ளிக்கரணை தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கிழக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
