பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, இலங்கையில் உள்ள மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
“இந்தியா மற்றும் இலங்கை இடையே இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் முகவர் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகும்.
இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்களை கொண்டுவர போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
மேலும் இது உள்நாட்டு துறைமுகங்களுக்கிடையில் பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை திறம்பட செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



