இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் புனித ஜோசப் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விசேட போஷாக்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் வறுமை நிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், குழந்தைகளின் போஷாக்கு நிலையை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாத வேலைத்திட்டம் பாரிய பலமாக உள்ளது என சுட்டிக்காட்டிய அவர், தன்னார்வ அடிப்படையில் இவ்வாறான போஷாக்கு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பாராட்டினார்.



