மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன்.
அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த வீடியோவில், மதுரை கோரிப்பானையந்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வழியே தத்தனேரி மயானத்திற்கு சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மது அருந்திவிட்டு, கூச்சலிட்டும் மாணவிகளை அச்சுறுத்தியும், அதை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை அடித்து தாக்கி, அங்கிருந்த மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்
. மாணவிகள் அனைவரும் கல்லூரி முடிந்து வெளியே வரும்போது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து பயந்துபோய் மாணவிகள் மீண்டும் கல்லூரிக்குள் சென்று விட்டனர்.
இது தொடர்பாக மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த 30-ந்தேதி தேவர் குரு பூஜை அன்று மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள், மோட்டார் சைக்கிள்களில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், அங்கிருந்த காவலாளிகளை தாக்கியதுடன் மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.