பொதுவாக சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கக் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது. நமது பண்டைய சாஸ்திரங்களில் சூரிய கிரகணம் குறித்து பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக சூரிய கிரகணத்தின் பொழுது பூமியில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்தும், அதனால் உயிர்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளனர். அந்த வகையில் நாளை ஏற்படக்கூடிய சூரிய கிரகணத்தின் பொழுது நாம் என்னன்னவற்றை செய்வதால், நம்மை சூரிய கிரகண தோஷங்கள் அண்டாமல் காத்துக் கொள்ள முடியும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்து மத புராணங்களின்படி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து, உண்பவருக்கு இறவா நிலையை கொடுக்கும் அமுதத்தை எடுத்த பொழுது தேவர்களும், அசுரர்களும் தங்களுக்குள் சரிபாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒப்புக்கொண்டனர். எனினும் அசுரர்கள் பலம் பெற்று விட கூடாது என்பதற்காக திருமால், மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்கள் இடம் கொண்டு வந்து சேர்த்து, தேவர்கள் அனைவரும் இறவா நிலை பெறுமாறு செய்தார் என்றும்.
அசுரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி வருந்தினாலும், அசுரர் கூட்டத்தில் இருந்த பாம்பு வடிவம் கொண்ட “சுவர்ணபானு” எனும் அசுரன், தேவர் போன்ற தோற்றத்தை கொண்டு, தேவர்கள் கூட்டத்தில் அமர்ந்து அமுதத்தை சாப்பிட்டான் எனவும். இதை கண்ட சூரியன் மற்றும் சந்திரன், சுவர்ணபானு ஒரு அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்ததாகவும். உடனே திருமால் தனது சக்கராயுதத்தை செலுத்த, அது சொர்ண பானுவை துண்டுகளாக வெட்டியது என்றும், எனினும் இறவா வரம் தரும் அமிர்தத்தை சுவர்ணபானு அருந்தியதால் அவன் இறக்கவில்லை என்றும், மேலும் இரு துண்டுகளாக இருந்த பாம்பின் வடிவம் கொண்ட சுவர்ணபானுன் உடலில் தலை பகுதி “ராகு” எனும் கிரகமாகவும், உடற்பகுதி “கேது” எனும் கிரகமாகவும் மாறியதாக கருதப்படுகின்றது.
தன்னை திருமாலிடம் காட்டிக் கொடுத்த சூரியன் மற்றும் சந்திர கிரகங்களை பழிவாங்க பாம்பின் வடிவம் கொண்ட இந்த ராகு மற்றும் கேது கிரகங்கள் சூரிய, சந்திர கிரகங்களை விழுங்கும் காலமே சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என கருதப்படுவதாக இந்து மதமட்டுமல்லாது, பௌத்த மத புராணங்களும் கூறுகின்றன.
சூரிய கிரகணம் 2022 நேரம்
இந்திய நேரப்படி அக்டோபர் 25 ஆம் தேதி பிற்பகல் 4 மணி 29 நிமிடம் முதல் 5 மணி 42 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது:
பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது ஏற்படுவதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. பொதுவாக சூரிய கிரகணத்தின் பொழுது பூமியில் ஏற்படுகின்ற நிழல் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டதாக கருதப்படுகின்றது. எனவே சூரிய கிரகணம் ஏற்படுகின்ற பொழுது கீழ்க்கண்டவற்றை கடைபிடித்தால் அந்த கிரகண தோஷங்கள் நம்மை அணுகாமல் காக்கிறது.