அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு- சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம்.

0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும்,

ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மோதல் வெடித்தது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர்.

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அன்றைய தினம் ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ். சென்றபோதுதான் பெரிய கலவரம் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அறைகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை தூக்கிச் சென்றனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

மோதல் சம்பவம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றினர். இதனை வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அடையாளமும் கண்டுள்ளனர்.

Leave a Reply