ராகுல் பாதயாத்திரை நாளை தொடங்குகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார்.

0

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

மத்தியில் ஆட்சியை இழந்ததோடு, பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பை இழந்தது.

அதோடு கட்சியின் மூத்த தலைவர்களும், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள்.

இந்த நிலையில் கட்சிக்கு நிலையான தலைவர் ஒருவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் ராகுல் காந்தியை மீண்டும் தலைமை பொறுப்புக்கு
கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு ராகுல் காந்தி இதுவரை உறுதியான பதில் எதுவும் கூறவில்லை.

அதே நேரம் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரும் முன்பு சோர்ந்து கிடக்கும் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்க அவர்கள் அனைவரையும் நேரில் சந்திக்க திட்டமிட்டார்.

இதற்காக அவர் இந்தியா முழுவதும் பாரத யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்க முடிவு செய்தார்.

அதன்படி இந்த பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது.

12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான திட்டமிடல் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது.

டெல்லியில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி என பலரும் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாத யாத்திரை பயணத்தை ஒருங்கிணைத்தனர்.

இப்பணிகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.

நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்

கன்னியாகுமரிக்கு ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வர இருப்பதால் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் பாதைகளிலும் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply