கனியாமூர் கலவர வழக்கில் கைதான 173 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு.

0

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த சம்பவத்தில் மாணவியின் மர்ம சாவு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த இரு சம்பவம் தொடர்பாக இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கலவர வழக்கு தொடர்பாக கடந்த 19-ந் தேதி கைதாகி கடலூர், வேலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 173 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்களை காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அவர்களை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் அந்தந்த சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

அதேபோல் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவின்பேரில் கலவர வழக்கில் கைதான ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகிய 5 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை நேற்று முடிந்ததை அடுத்து அவர்கள் 5 பேரை மீண்டும் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இவர்களை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான 103 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply