புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் நான்முனை போட்டி உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இடையில் இந்த நான்முனை போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் நான்கு பேரும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலர் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்த கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட இரண்டு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிஸ்தர் ஒருவர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைதொடர்புக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்வதற்காக அவரது கட்சியின் முக்கியஸ்தர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணியினர், சஜித்திற்கு ஆதரவளிக்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று தரப்பாக பிரிந்துள்ளனர் எனக்கூறப்படுகிறது. இந்த கட்சியை சேர்ந்த சிலர், ரணில் விக்ரமசிங்கவுக்கும் மேலும் சிலர் சஜித் பிரேமதாசவையும் ஆதரித்து வரும் நிலையில், மேலும் சிலர் டளஸ் அழகப்பெருமவை ஆதரிது வருகின்றனர்.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகுதிகளை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. தினேஷ் குணவர்தன, அனுரபிரியதர்ன யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமர் பதவிக்கான எதிர்பார்ப்பில் இருப்பதாக தெரியவருகிறது.



