மாணவர் சிறப்பு பஸ்கள் 10 நாளில் இயக்கப்படும்- கவர்னர் தமிழிசை தகவல்.

0

புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.

இன்று 5 பள்ளிக்கு செல்கிறேன். மாணவர்களோடு மதிய உணவு அருந்துகிறேன்.

ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறை நவீனமயமாக மாற்றப்பட வேண்டும்

இதற்காக முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். காரைக்காலில் வாந்தி பேதியால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை. இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். வாந்தி, பேதியை தடுக்கும் வழிமுறைகள் பற்றி அறிவுறுத்தினேன். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தற்போது வாந்தி, பேதி கட்டுக்குள் வந்துள்ளது. முதல்-அமைச்சரும் காரைக்காலுக்கு நேரில் சென்றுள்ளார்.

பள்ளி மாணவர்களின் பஸ் இயக்க புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பஸ் இயக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு விட்டது. 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தொடங்கி உள்ளோம். மதிய உணவு பற்றி ஆய்வு செய்ய நேரில் சாப்பிட உள்ளேன். எந்த குறைபாடையும் நியாயப்படுத்தவில்லை. அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்படும். நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று உயர்ந்துள்ளது. முக கவசம் அணிவது கட்டாயம்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். கொரோனாவை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ. முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் சென்டாக் அறிவிப்பு வெளியிடப்படும்.

பிரதமர் என்னை சந்தித்தபோது புதுவையை பற்றி கேட்டறிந்தார்.

புதுவையில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply