நாட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினரும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம். ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
பசில் ராஜபக்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரரே இவர். எஸ்.எம். சந்திரசேனவுக்கு இம்முறை அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியால்தான் அரச தலைவர் வெற்றிபெற்றார். எனினும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை அவர் சிதைக்க ஆரம்பித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்துவிட்டன
இதுவே தற்போதைய குழப்பமான நிலைமைகளுக்குக் காரணம். 69 இலட்சம் வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்ததாகச் சிலர் கூறுகின்றனர்.
அவ்வாறு இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர்கள் எவரும் இருக்கவில்லை. அர்ப்பணிப்பால் வெற்றி பெற்றோம். நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியமை தான் எடுத்த சிறந்த முடிவு என அரச தலைவர் நினைப்பார் என்றால், அதுவும் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவைப் போன்றதாகவே இருக்கும்.
தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்துவிட்டன. போராட்டக்காரர்கள் கூறுவது தவறு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஆரம்பத்திலிருந்தோம். போராட்டக்காரர்கள் கூறுவது சரி என்பது தற்போது எமக்குப் புரிகின்றது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



