வீடு கட்டும் பொழுது அதற்கு பல பூஜைகள் செய்யப்படுகின்றன.
அவ்வாறு முதலில் பூமி பூஜை செய்வது தான் வழக்கமாகும்.
அடுத்ததாக வாசல்கால் வைத்து, அந்த நிலை வாசலுக்கான பூஜை செய்வது மிகவும் முக்கியமான விசேஷமாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீட்டில் நிலைவாசல் என்பது அந்த குடும்பத்தின் மிகவும் முக்கியமான தலைவாசல் ஆகும்.
எனவே வீட்டிற்கு வரும் நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும் இந்த நிலைவாசலை தாண்டி தான் வரவேண்டும்.
இப்படி அனைத்திற்கும் அடித்தளமாக அமையும் இந்த நிலை வாசலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு இருபுறமும் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.
எப்பொழுதும் வாசற்படியில் வாசனை மலர்கள் வைத்திருக்க வேண்டும். இன்னும் அதிகப்படியான ஆற்றல் கொடுக்க உருளியில் தண்ணீர் ஊற்றி அதில் வாசனை மலர்களை போட்டு வைக்க வேண்டும். பிறகு வாசலில் மேல்புறம் தோரணம் கட்டி தொங்கவிட வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை மாவிலையை சொருகி வைக்க வேண்டும். பிறகு கண் திருஷ்டி நீங்க ஆகாசகருடன் கிழங்கு அல்லது சோற்றுக்கற்றாழையை கட்டி வைக்கலாம்.
வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் தீபம் காண்பித்து பூஜை செய்யும்பொழுது நிலை வாசலுக்கும் தீபம் காண்பித்து பூஜை செய்ய வேண்டும்.
பிறகு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு நமது கையில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து, அதனை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அதையும் நிலை வாசல்படியில் கட்டி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தீய சக்திகள் எதுவும் உள் நுழையாமல் இருக்கும். அத்துடன் எதிரிகளின் பார்வையும் நம்மை பாதிக்காமல் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் குலதெய்வ கோவிலில் இருந்து அந்த கோவிலினுள் இருக்கும் சிறிதளவு மண்ணை எடுத்து வந்து, துணியில் கட்டி வாசலில் தொங்க விட்டால் எப்படிப்பட்ட துன்பம், துயரம் எதுவாக இருந்தாலும் அது சட்டென்று மறைந்து விடும்.
