கைகளில் புனித கயிறுகள் கட்டிக்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய விதிகள்

0

நம் முன்னோர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் விஞ்ஞானத்தோடு மெய்ஞானம் கலந்தே இருந்து வந்திருக்கிறது உதாரணமாக அதிகாலையில் எழுந்து பெண்கள் அரிசி மாவில் வீட்டிற்கு முன்பாக கோலமிடுவதால் நம் வீட்டிற்குள்ளாக நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதோடு, கோலமிடப்பட்ட அரிசி மாவு தரையில் இருக்கின்ற எறும்புகள் போன்ற உயிரினங்களுக்கு உணவாகவும் அமைந்து, தர்மம் செய்த பலனை கொடுக்கிறது. இப்படி எண்ணிலடங்காத பல செயல் முறைகளில் ஒன்று தான் கோயில் பிரசாதமாக தரப்பட்ட புனித கயிறுகளை கைகளில் கட்டிக் கொள்வது. அது குறித்த சில விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று வரும்போது அந்த கோயிலின் பிரசாதமாக தரப்படும் புனித கயிற்றையோ அல்லது அந்த கோவில் வளாகத்தில் விற்கப்படுகின்ற கயிற்றையோ வாங்கி வந்து நம்முடைய கைகளில் கட்டிக்கொள்வது வழக்கமான ஒரு விடயம் தான். நமது பாரம்பரியத்தில் இப்படி அனைத்திற்குமே ஒரு வரைமுறை உள்ளது. அதே போன்று கோயிலில் வழங்கப்படுகின்ற மற்றும் நாம் பூஜித்த புனித கயிறுகள் கட்டிக்கொள்வதற்கும் சில குறிப்பிட்ட வரைமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவதால் நமக்கு நன்மைகள் ஏராளம் உண்டு.

பல வண்ணங்களில் இருக்கும் புனித கயிறுகளைப் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு விருப்பம் போன்ற பல வித முடிச்சுகளைப் போட்டு கட்டிக் கொள்கின்றனர். ஆனால் சாஸ்திரப்படி பார்க்கும்போது 5 முடிச்சுகளுக்கு அதிகம் இல்லாத வகையில் முடிச்சு போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து முடிச்சுகள் என்பது காமம், குரோதம், மதம், மாச்சரியம், லோபம் போன்ற ஐந்து குணங்களை இறைவனின் அருளால் நிறுத்துவதை உணர்த்துவது இந்த ஐந்து முடிச்சுகள் ஆகும்.

கோயில்களில் வாங்கப்படும் புனித கயிறுகளை ஆண்கள் தங்களது வலது கரத்தில் மட்டுமே கட்டிக்கொள்ள வேண்டும். அது போல பெண்கள் தங்களின் இடது கையில் மட்டுமே புனித கயிறுகளை கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் தினத்தில் கட்டப்படும் நோன்புக் கயிற்றை மட்டும் பெண்கள் தங்களின் வலது கரத்தில் கட்டிக் கொள்ளலாம்.

மேலும் பலர் கோயில்களில் வழங்கப்படுகின்ற புனித கயிற்றை தங்களின் இஷ்டம் போல நெடுநாட்களுக்கு கைகளில் கட்டி வைத்திருக்கின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும். எந்த ஒரு கோயிலிலும் பூஜிக்கப்பட்டு தரப்படும் புனித கயிற்றின் மந்திர சக்தி அதிகபட்சம் ஒரு மண்டலம் எனப்படும் 48 தினங்களுக்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு அந்த புனித கயிறுகளை மனிதர்களின் காலில் படாத ஓடுகின்ற நதி, கண்மாய்கள் போன்ற ஓடும் நீரில் வீசி விட வேண்டும். அல்லது ஏதாவது ஒரு மரத்தில் கட்டி வைத்து விட வேண்டும்.

கைகளில் புனித கயிறுகளை கட்டியிருக்கும் நபர்களுக்கு பல விதமான ஆன்மீக நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு தூங்கும் போது கெட்ட கனவுகள் ஏதும் ஏற்படாமல் காக்கிறது. துஷ்ட சக்திகள், மாந்திரீக ஏவல்கள் அணுகாமல் காக்கின்ற கவசம் போன்று கயிறுகள் செயல்படுகின்றது. தோஷங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. உடலில் இருக்கின்ற நோய் நொடிகளை நீக்குகிறது. மனோ தைரியத்தை அதிகரிக்கிறது.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply