இதுதான்… இப்படித்தான்!ராகு இருந்தால் ஆண் குழந்தை, கேது இருந்தால் பெண் குழந்தை!

0

புத்திரதோஷம் பற்றிய விபரத்திற்குப் போவதற்கு முன்னே, முதலில் நம் உடல் சார்ந்த நிலை பற்றிய சில விஷயங்களைப் பார்த்தே ஆக வேண்டும்,

நான் ஏற்கெனவே கூறியபடி, மருத்துவரே ஜோதிடர், ஜோதிடரே மருத்துவர் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சில விஷயங்களை ஆராய்வோம்,

30 வருடங்களுக்கு முன், பெண்கள் பூப்பெய்வது என்பது 15,16,17 வயதில் தான் நடந்தது. ஆனால் தற்போது 9, 10, 11 என்ற வயதிலேயே பூப்பெய்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்தான் உள்ளன.

ஏன்? என்ன காரணம்?

நிச்சயம் நம் உணவுமுறைதான் காரணம்.

ஐயா, அம்மாக்களே. தயவுசெய்து நம் குழந்தைகளுக்கு குளிர்பானம் மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளை( junk food) தவிர்த்துவிடுங்கள், அவை ரசாயன உணவு. எனவேதான் உடற்கூறில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணுகிறது.

நம்முடைய அன்றாட உணவும் ரசாயன மயம்தான் எனவே உணவில் கவனம் கொள்ளுங்கள்.

சரி இதற்கும் குழந்தைப் பிறப்புக்கும் என்ன சம்பந்தம்?

நிச்சயம் உண்டு. உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். அதுவே பாதி பிரச்சினைகளைத் தீர்த்துவிடும். அல்லது பாதிப் பிரச்சினைகளை வராமலே செய்துவிடும்.

சரி… நாம் ஜோதிட விபரங்களைப் பார்ப்போம்.

21ம் அத்தியாயத்தில், 9 விதமான குறிப்புகளைத் தந்திருந்தேன். அந்த வரிசையில் இப்போது பார்ப்போம்.

ஆண் ஜாதகத்தில் 5 ஆம் பாவகம் அதாவது 5ம் இடம். இதை எப்படி அறிவது என்பவர்களுக்காக, உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்பதை சுருக்கமாக “ல” என எழுதியிருக்கும். அது முதல் பாவகம். அதிலிருந்து வரும் 5ம் இடமே 5ம் பாவகம்.

இதேபோல பெண் ஜாதகத்தில் 9ம் இடம் பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் சூரியன் இருக்க, ஆண் குழந்தை உண்டு. ஆனால் ஒரு குழந்தை மட்டுமே இருக்கும். உங்களில் யாராவது “இல்லையே எனக்கு 2 குழந்தை இருக்கே “ என்பவர்களுக்கு, சூரியன் மட்டும் தனித்து இருந்தால் தான் மேற்கூறிய பலன்.

மாறாக சூரியனோடு இன்னொரு கிரகம் இருந்தால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தை உண்டு.

இங்கு விவரிக்கும் தகவல்கள், தனித்த கிரகங்கள் இருக்கும் பலன்களே.

இனி அடுத்து.. சந்திரன் இருக்க பெண் குழந்தை உண்டு.

செவ்வாய் இருக்க ஆண் குழந்தை, புதன் இருக்க பெண் குழந்தை, சுக்கிரன் இருக்க பெண் குழந்தை, சனி இருக்க தாமதமாக குழந்தை பாக்கியம். ஆனால் இரவில் குழந்தை பிறக்கும்.

ராகு இருக்க பல குழந்தைகள். அதிலும் ஆண் குழந்தைகளே அதிகம்.

கேது இருக்க பல பெண் குழந்தைகள் உண்டு.

இதுவரை புத்திரபாக்கியம் தரும் விபரங்களை சிறிய அளவில் பார்த்தோம். ஆனால் நாம் பார்ப்பது புத்திரதோஷத்தைப் பற்றி. எனவே அதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

ராகு கேது இருந்தால் புத்திர தோஷம் என்பார்கள்,

நிச்சயம் அப்படி இல்லை.

ராகு இருக்க பல ஆண் குழந்தை என்று சொன்னேன் அல்லவா. அப்படியானால் இதில் புத்திர தோஷம் எப்படி வரும்?

வரும். அதாவது இத்தனை ஆண் குழந்தை இருந்தும் கடைசிக் காலத்தில், மாதம் ஒரு பிள்ளையின் வீட்டில் வாசம் செய்ய வேண்டிவரும். இது தோஷம்தானே!

கேது இருக்க பெண் குழந்தைகள் மட்டுமே உண்டு எனப் பார்த்தோம், ஆம்… இதுவும் ஒருவகையில் தோஷமே. எப்படி?

ஏற்கெனவே கேதுவைப் பற்றி விளக்கம் தந்திருக்கிறேன். கேதுவானவர் ஒன்றைத் தந்து அதை அனுபவிக்க அனுமதிக்கமாட்டார். ஏங்கச் செய்வார்.

பெண் குழந்தை என்பதே திருமணத்திற்குப் பின் கணவர் வீட்டில் வாழ்வதுதான் மரியாதை,சிறப்பு.

இப்போது புரிகிறதா.. கேது குழந்தையைத் தந்து சந்தோஷத்தைக் கொடுத்து பிறகு திருமணத்திற்குப் பின் பிரிவு என்ற தோஷத்தைத் தருவார்.

இங்கு இன்னும் குருபகவானைப் பற்றி விளக்கவில்லை,

காரணம்? புத்திர பாக்கியத்தை அருளுபவர் குருபகவானே. ஆனால் அவர் மேலே குறிப்பிட்ட பாவகங்களில் இருந்தால், அவரே புத்திரதோஷத்தையும் தருவார்.

அதற்கு பெயர் “காரகோபாவக நாஸ்தி.”

இதன் விளக்கம் என்னவென்றால் 5ம் இடம் என்பது பாவகம், குருவானவர் புத்திர காரகன், இந்த இரண்டும் இணையும்போது “ ’’காரகோபாவக நாஸ்தி” என்னும் தோஷம் உண்டாகிறது.

இங்கு ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்த ஸ்தானங்களில் மற்றொரு கிரகம் இருந்தாலும், அல்லது பார்த்தாலும் தோஷம் கிடையாது.- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply