எடுத்த காரியம் ஜெயிக்கணுமா? ‘அபிஜித்’ நேரத்தை பயன்படுத்துங்க!

0

தாரபலம் என்றால் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள்.

இந்த தாரபலத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி என அமைத்துக்கொள்ள எல்லாம் நன்மையாகும். எல்லாம் நன்மைக்கே!

நான் 28 வதாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா! அதன் பெயர் என்ன? அது எந்த ராசியில் இருக்கிறது? என பார்ப்போம்.

அந்த நட்சத்திரத்தின் பெயர் “அபிஜித்” நட்சத்திரம்.

இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.

இல்லையே … மகரத்தில் உத்திராடம் 2,3,4, பாதங்கள்,திருவோணம் 1,2,3,4 ஆகிய பாதங்கள், அவிட்டம் 1,2 பாதங்கள் மட்டுமே இருக்கிறது என்கிறீர்கள்தானே…

இந்த அபிஜித் நட்சத்திரம் சூட்சும நட்சத்திரம் ஆகும்.

இது மகர ராசியில் உத்திராடம் 4 ஆம் பாதம், திருவோணம் 1 ம் பாதத்தில் உள்ளது,

எனவே உங்களில் யார் உத்திராடம் 4, திருவோணம் 1 என்ற நட்சத்திரப் பாதங்களில் பிறந்திருக்கிறீர்களோ அவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள் ஆவார்கள்.

சரி என்ன செய்யும் இந்த அபிஜித்?

வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை சந்திக்காதவர்கள் என எவருமே இல்லை. இதில் துயரங்களைக் கண்டு துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர்.

துன்பமோ , துயரமோ எது வந்தாலும் அதன் பாதிப்பை சிறிதும் உணராதவர்கள், இந்த அபிஜித் நட்சத்திரக்காரர்கள்.

ஆக, துன்பத்தை மனம் உணராவிட்டாலே நோய் முதற்கொண்டு எந்த பாதிப்பும் நம்மை அணுகாது.

இந்த உத்திராடம், திருவோணத்தில் பிறந்த தெய்வங்களைப் பாருங்களேன்.

உத்திராடத்தில் கணபதி…

இவரை மஞ்சளிலும் பிடித்து வணங்கலாம், மண்ணிலும் பிடித்து வணங்கலாம், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்.

திருவோணத்தில் பிறந்தவர் மகாவிஷ்ணு. இவரையும் நீங்கள் அறிவீர்கள்.

சதா சயனத்தில் இருப்பவர், எதைப்பற்றியும் கவலைப்படாத தோற்றம், ஆனால் உள்ளுக்குள் அனைத்தையும் அசைபோட்டுக் கொண்டிருப்பவர்.

ஆக… இந்த அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதைபற்றியும் கவலைபடத்தேவையில்லை,

இவர்களுக்கு அனைத்தும் தேடாமலே கிடைக்கும்.

எனவே எல்லாம் இறைவன் செயல் என்று இருந்தாலே சகல காரியங்களும் நன்மையாகவே நடந்தேறும்.

இந்த அபிஜித்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.

ஏதோ ஒரு சூழ்நிலை, திடீர்த் திருமணம், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

அந்த நாள், தோஷமுள்ள நாளாக இருந்தாலும் இந்த அபிஜித் நட்சத்திரநாள் அந்த தோஷங்களைக் களைந்துவிடும்.

ஆனால் இது மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அதுவரை காத்திருக்க வேண்டுமா?

இல்லை… ஒவ்வொரு நாளும் அபிஜித் நேரம் என்ற ஒரு சுப நேரம் உண்டு.

அது எந்த நேரம் என்றால் .. மதியம் 12 மணி முதல்12-30 மணிவரை உள்ள நேரமே அபிஜித் நேரம் ஆகும்.

இந்த அபிஜித் நேரத்திற்கு எந்த தோஷமும் இல்லை. எந்த தோசமும் இந்த நேரத்தை கட்டுப்படுத்தாது,

ராகுகாலம், எமகண்டம்,கரிநாள், பிரதமை, அஷ்டமி, நவமி, செவ்வாய்க்கிழமை,சனிக்கிழமை என எதுவும் இந்த அபிஜித்தை கட்டுப்படுத்தாது.

எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த அபிஜித் நேரத்தையும், அபிஜித் நட்சத்திர நாளையும் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள். எடுத்த செயல்கள் யாவும் வெற்றிபெறும் என்பது உறுதி!- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply